

மாட்ரிட்: ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்ற மகளிருக்கான நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஸ்பெயின் 2-ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.
நடப்பு சாம்பியனாக களம் கண்ட அந்த அணி, இறுதி ஆட்டத்தில் 3-0 கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி, கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது.
முன்னதாக இந்த அணிகள் இடையேயான இறுதி ஆட்டம், இரு பகுதிகளாக (2 லெக்) நடைபெற்றது.
இதில் கடந்த நவம்பர் 28-ஆம் தேதி நடைபெற்ற முதல் லெக் ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.
இந்நிலையில், இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற 2-ஆவது லெக் ஆட்டத்தில், ஸ்பெயின் அணிக்காக கிளாடியா பினா 61-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கை தொடங்கினார். விக்கி லோபஸ் 68-ஆவது நிமிஷத்தில் அதை 2-ஆக அதிகரித்தார். ஜெர்மனி தனக்கான கோல் வாய்ப்புக்காக போராடி வந்த நிலையில், கிளாடியா பினா மீண்டும் 74-ஆவது நிமிஷத்தில் ஸ்கோர் செய்தார்.
எஞ்சிய நேரத்தில் ஜெர்மனிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இறுதியில் ஸ்பெயின் 3-0 கோல் கணக்கில் வென்றது. இதனால், மொத்த கோல் கணக்கு அடிப்படையில் அந்த அணி 3-0 என்ற கணக்கிலேயே வென்று சாம்பியன் ஆனது.
ஸ்பெயின் நட்சத்திர வீராங்கனை அய்டானா பொன்மட்டி காலில் எலும்பு முறிவு கண்டு இந்த ஆட்டத்தில் பங்கேற்க முடியாமல் போன நிலையில், கிளாடியா பினா அந்த இடத்தை பூர்த்தி செய்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.