நார்வேயில் நடைபெறும் பளுதூக்குதல் உலக சாம்பியன்ஷிப்பில், இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார்.
உலக சாம்பியன்ஷிப்பில் இது அவரின் 3-ஆவது பதக்கமாகும். இதற்கு முன், 2017-இல் உலக சாம்பியனான மீராபாய் சானு, 2022-இல் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.
இந்த முறை அவர் 49 கிலோவுக்கு பதிலாக, 48 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றார். ஸ்னாட்ச் பிரிவில் 84 கிலோ, கிளீன் & ஜெர்க் பிரிவில் 115 கிலோ என, அவர் மொத்தமாக 199 கிலோ எடையுடன் 2-ஆம் இடம் பிடித்தார்.
இதில் ஸ்னாட்ச் பிரிவில் 87 கிலோ எடையைத் தூக்க இருமுறை முயன்று தோல்வியுற்ற மீராபாய் சானு, 84 கிலோவை வெற்றிகரமாகத் தூக்கினார். பின்னர் கிளீன் & ஜெர்க் பிரிவில் தனது 3 முயற்சிகளிலுமே முறையே 109, 112, 115 கிலோவை வெற்றிகரமாகத் தூக்கினார். 2021 டோக்கியோ ஒலிம்பிக்கிலும் கிளீன் & ஜெர்க் பிரிவில் அவர் 115 கிலோவைத் தூக்கி, வெள்ளிப் பதக்கமும் வென்றது நினைவுகூரத்தக்கது.
இப்போட்டியில் வட கொரியாவின் ரி சாங் கம் 213 கிலோவை (91+122) தூக்கி தங்கம் வெல்ல, கிளீன் & ஜெர்க் பிரிவில் அவர் உலக சாதனை படைத்தார். தாய்லாந்தின் தன்யதோன் சுக்சரோன் 198 கிலோவுடன் (88+110) வெண்கலம் பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.