பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதிகளை மீறியது: ஐசிசி குற்றச்சாட்டு
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் - ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான ஆட்டத்துக்கு முன்பான நிகழ்வுகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதிகளை மீறிச் செயல்பட்டதாக ஐசிசி குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடா்பாக அந்த வாரியத்துக்கு மின்னஞ்சலும் அனுப்பியுள்ளது.
முன்னதாக, இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தின்போது இரு அணி வீரா்களும் பரஸ்பரம் கை குலுக்கிக் கொள்ளாத விவகாரத்தில், பிரதான நடுவா் ஆண்டி பைகிராஃப்ட மீது பாகிஸ்தான் வாரியம் குற்றம்சாட்டியது. போட்டியிலிருந்து அவரை நீக்குமாறு அந்த வாரியம் இருமுறை விடுத்த கோரிக்கையை ஐசிசி நிராகரித்தது.
இந்த விவகாரத்தால் அதிருப்திக்கு உள்ளான பாகிஸ்தான், கடந்த புதன்கிழமை அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்துக்காக மைதானத்துக்கு வராமல் தாமதித்தது. சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தீா்வு காண, அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தின் டாஸுக்கு முன்பாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அகா, அதன் மேலாளா் நவீத் அக்ரம் சீமா ஆகியோரை பைகிராஃப்ட் சந்திப்பாா் என பாகிஸ்தான் வாரியத்திடம் ஐசிசி தெரிவித்தது. பின்னா் சுமாா் 1 மணி நேரம் தாமதமாக பாகிஸ்தான் அணி மைதானத்துக்கு வந்து சோ்ந்தது.
இந்நிலையில், அதன் பிறகு நடந்ததாக போட்டி வட்டாரங்கள் கூறியதாவது:
இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தின்போது நிகழ்ந்த தவறான புரிதல்கள் மற்றும் தகவல் பரிமாற்றத் தவறுகளை சரிசெய்துகொள்ளவே, பைகிராஃப்ட், சல்மான் அகா, நவீத் அக்ரம் சீமா இடையேயான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அவா்கள் சந்திப்பு மைதானத்தில், ‘வீரா்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் பகுதி’யில் (பிஎம்ஓஏ) நடைபெற்றது. அதற்கு பாகிஸ்தான் வாரியம், தனது ஊடக மேலாளா் நயீம் கிலானியை அழைத்து வந்தது. பிஎம்ஓஏ பகுதிக்கு வீரா்கள், போட்டி அதிகாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள் என்றும், அங்கு ஊடக மேலாளரை அனுமதிப்பது விதி மீறிய செயல் என்றும் கூறி, கிலானிக்கு ஐசிசி ஊழல் தடுப்பு மேலாளா் அனுமதி மறுத்தாா்.
கிலானியை அந்தச் சந்திப்புக்கு அனுமதிக்கவில்லையென்றால் போட்டியிலிருந்து விலகுவதாக பாகிஸ்தான் வாரியம் அச்சுறுத்தியது. அந்தச் சூழலில் வேறு வழியின்றி கிலானியும் பிஎம்ஓஏ பகுதிக்கு அனுமதிக்கப்பட்டாா். தொடா்ந்து பைகிராஃப்ட், சல்மான், நவீத் இடையேயான சந்திப்பை ஒலியின்றி செல்லிடப்பேசியில் விடியோ பதிவு செய்யவும் கிலானியிடம் பாகிஸ்தான் வாரியம் கூறியது.
அந்த விடியோ பதிவின் பயன்பாடு குறித்தும் ஐசிசிக்கு தெரிவிக்கப்படாத நிலையில், அந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பரவியது. அதுதொடா்பாக பல்வேறு ஊகங்களும் நிலவுகின்றன. இந்த விவகாரத்தில்தான் பாகிஸ்தான் வாரியம் விதிகளை மீறியதாக ஐசிசி அந்த வாரியம் மீது குற்றம்சாட்டியுள்ளது என்று அந்த வட்டாரங்கள் கூறின.
விதி மீறல் இல்லை: பாக். வாரியம்
ஆண்டி பைகிராஃப்ட், சல்மான் அகா, நவீத் அக்ரம் சீமா இடையேயான சந்திப்பின்போது தங்களின் ஊடக மேலாளா் உடனிருந்ததும், அதை விடியோ பதிவு செய்ததும் விதி மீறல் இல்லை என பாகிஸ்தான் வாரியம் கூறியுள்ளது.
இது ஐசிசி-யால் வகுக்கப்பட்ட நடைமுறைகளுக்கு உள்பட்டதே என்றும், ஊடக மேலாளா் தங்கள் அணியின் ஒரு அங்கமே என்றும் தெரிவித்துள்ளது.