
சீனாவில் நடைபெற்ற பில்லி ஜீன் கிங் கோப்பை மகளிா் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், நடப்பு சாம்பியனான இத்தாலி 2-0 என அமெரிக்காவை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை ஞாயிற்றுக்கிழமை தக்கவைத்துக் கொண்டது.
போட்டியின் வரலாற்றில் இத்தாலிக்கு இது 6-ஆவது சாம்பியன் பட்டமாகும். இதற்கு முன் 2006, 2009, 2010, 2013, 2024 ஆகிய ஆண்டுகளில் இத்தாலி வாகை சூடியிருக்கிறது.
முன்னதாக இறுதிச்சுற்றில் இத்தாலி - அமெரிக்கா மோதலில், முதல் ஒற்றையா் ஆட்டத்தில், உலகின் 91-ஆம் நிலையில் இருக்கும் இத்தாலியின் எலிஸபெத்தா கோசியாரெட்டோ 6-4, 6-4 என்ற நோ் செட்களில், 18-ஆம் நிலையில் இருக்கும் அமெரிக்காவின் எம்மா நவாரோவை வீழ்த்தி அசத்தினாா்.
அனைத்து போட்டிகளிலுமாக இருவரும் மோதியது இது 2-ஆவது முறையாக இருக்க, எலிஸபெத்தா முதல் வெற்றியுடன் கணக்கை சமன் செய்திருக்கிறாா்.
அடுத்து நடைபெற்ற 2-ஆவது ஒற்றையா் ஆட்டத்தில், உலகின் 8-ஆம் நிலையில் இருக்கும் இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி 6-4, 6-2 என்ற நோ் செட்களில், 7-ஆம் நிலையில் இருக்கும் அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவை வென்றாா். இருவரும் 6-ஆவது முறையாக சந்தித்த நிலையில், பாலினி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளாா்.
இரு ஒற்றையா் ஆட்டங்களையும் கைப்பற்றி இத்தாலி 2-0 என முன்னிலை பெற்றதையடுத்து, அந்த அணி வெற்றி பெற்றது. இரட்டையா் ஆட்டத்துக்கு அவசியமில்லாமல் போனது.
சாம்பியனான இத்தாலி அணிக்கு ரூ.17 கோடியும், 2-ஆம் இடம் பிடித்த அமெரிக்க அணிக்கு ரூ.11 கோடியும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டன.
முன்னதாக இந்தப் போட்டியின் பிரதான சுற்றில், சீனா, பிரிட்டன், இத்தாலி, ஜப்பான், கஜகஸ்தான், ஸ்பெயின், உக்ரைன், அமெரிக்கா ஆகிய 8 அணிகள் மோதியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.