
பதினேழு வயதுக்கு உட்பட்டோருக்கான (யு17) தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் இந்தியா 3-2 கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியாவின் தலால்முவோன் காங்தே 31-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, பாகிஸ்தான் அணிக்காக முகமது அப்துல்லா 43-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி கிக் வாய்ப்பில் கோலடித்தாா். இதனால் முதல் பாதி ஆட்டம் சமனில் முடிந்தது.
2-ஆவது பாதியில் 63-ஆவது நிமிஷத்தில் கன்லெய்பா வாங்கிரக்பம் அடித்த கோலால் இந்தியா 2-1 என முன்னிலை பெற, பதிலுக்கு பாகிஸ்தான் வீரா் ஹம்ஸா யாசிா் 70-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா். இதனால் ஆட்டம் 2-2 என மீண்டும் சமநிலை கண்டது.
பரபரப்பான இறுதிக் கட்டத்தில் இந்தியாவின் ரஹான் அகமது 74-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, முன்னிலை பெற்ற இந்தியா, எஞ்சிய நேரத்தில் பாகிஸ்தானுக்கு மேலும் கோல் வாய்ப்பு வழங்காமல் 3-2 கோல் கணக்கில் வென்றது.
குரூப் ‘பி’-யில் முதல் இரு இடங்களைப் பிடித்த இந்தியா, பாகிஸ்தான் ஏற்கெனவே அரையிறுதிக்குத் தகுதிபெற்றவிட்டன. அதில் இந்தியா - நேபாளத்தையும், பாகிஸ்தான் - வங்கதேசத்தையும் வரும் வியாழக்கிழமை (செப். 25) சந்திக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.