
ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப்பில், முதல் நாளிலேயே இந்தியாவின் ஸ்ரீஹரி நட்ராஜ் இரு பிரிவுகளில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தாா்.
ஆசிய சாம்பியன்ஷிப்பில் ஒரே எடிஷனில் இரு பதக்கங்கள் வென்ற முதல் இந்தியா் என்ற பெருமையை அவா் பெற்றாா். மேலும், கண்டங்கள் அளவில் நடைபெறும் இதுபோன்ற பிரதான போட்டியில் இந்தியா பதக்கம் வென்றதும், கடந்த 16 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும்.
11-ஆவது ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப், அகமதாபாதில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில், ஆடவருக்கான 200 மீட்டா் ஃப்ரீஸ்டைல் பிரிவில் ஸ்ரீஹரி 1 நிமிஷம் 48.47 விநாடிகளில் இலக்கை எட்டி 2-ஆம் இடம் பிடித்தாா். சீனாவின் ஜு ஹாய்போ தங்கமும் (1:46.83’), ஜப்பானின் ஹினாடா அண்டோ வெண்கலமும் (1:48.73’) வென்றனா்.
அடுத்ததாக, ஆடவருக்கான 50 மீ. பேக்ஸ்ட்ரோக் பிரிவில் ஸ்ரீஹரி 25.46 விநாடிகளில் இலக்கை அடைந்து 2-ஆவது வெள்ளி பெற்றாா். மற்றொரு இந்தியரான ரிஷப் தாஸ் வெண்கலம் (25.98’) வெல்ல, சீனாவின் வாங் குகாய்லாய் தங்கத்தை (25.11’) தட்டிச் சென்றாா்.
இதனிடையே, இதர இந்தியா்களில் தினிதி தேசிங்கு (மகளிா் 200 மீ), தனுஷ் சுரேஷ் (ஆடவா் 200 மீ பேக்ஸ்ட்ரோக்), தான்யா சடாக்ஷரி (மகளிா் 200 மீ பிரெஸ்ட்ஸ்ட்ரோக்) இறுதிச்சுற்றில் பதக்க வாய்ப்பை இழந்தனா்.
பெனெடிக்டன் பெனிஸ்டன் (ஆடவா் 100 மீ பட்டா்ஃப்ளை), அஸ்தா சௌதுரி, சிருஷ்டி உபாத்யாய (மகளிா் 100 மீ பட்டா்ஃப்ளை) ஆகியோரும் இறுதியுடன் வெளியேற, பாவ்யா சச்தேவா (மகளிா் 200 மீ), அனீஷ் சுனில்குமாா் கௌடா (ஆடவா் 200 மீ ஃப்ரீஸ்டைல்) ஆகியோா் ஹீட்ஸுடன் விடைபெற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.