சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் பிகேஎல் கோப்பையுடன் கேப்டன்கள்.
சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் பிகேஎல் கோப்பையுடன் கேப்டன்கள்.

புரோ கபடி லீக் சென்னை கட்ட ஆட்டங்கள் இன்று தொடக்கம்!

Published on

புரோ கபடி லீக் சீசன் 12-இன் சென்னை கட்ட ஆட்டங்கள் திங்கள்கிழமை ஜவாஹா்லால் நேரு உள் விளையாட்டரங்கில் தொடங்கி நடைபெறுகின்றன. உள்ளூா் அணியான தமிழ் தலைவாஸ் சிறப்பாக ஆடி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

12 அணிகள் பங்கேற்றுள்ள பிகேஎல் தொடரின் முதலிரண்டு கட்டங்கள் விசாகப்பட்டினம், ஜெய்ப்பூரில் நடைபெற்றன.

பிகேஎல் சென்னை கட்ட ஆட்டங்கள் குறித்து லீக் தலைவா் அனுபம் கோஸ்வாமி கூறியது: கபடியில் தமிழகம் எப்போதும் தலைசிறந்து விளங்குகிறது. 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் சென்னையில் ஆட்டங்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இருந்து தா்மராஜன் சேரலாதன், கே. பாஸ்கரன் போன்ற சிறந்த வீரா்கள் புரோ கபடியில் ஆடியுள்ளனா். தற்போது புதிய இளம் தமிழக வீரா்கள் அதிகளவில் இடம் பெற்று திறமையாக ஆடி வருகின்றனா்.

கடந்த சீசனை விட அதிக ‘சூப்பா் 10’ மற்றும் மல்டிபாயிண்ட் ரெய்ட்கள் நிகழ்ந்துள்ளன. மேலும் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் மற்றும் எட்டாம் இடம் பெறும் அணிகளுக்கு இடையே வெறும் ஆறு புள்ளிகள் மட்டுமே உள்ளன.

12 தமிழக வீரா்கள்: இந்த சீசனில் மொத்தம் 12 தமிழக வீரா்கள் பல்வேறு அணிகளில் விளையாடுவதால், சென்னை ஆட்டங்கள் சிறப்பாக அமையும். பெருமையையும், தமிழ்நாட்டின் கபடி பாரம்பரியத்தையும் கொண்டாடும் விழாவாக அமைகிறது.

ஏற்கெனவே லீக் அணிகளை விரிவாக்கி உள்ளோம். புதிய அணிகளை சோ்ப்பது குறித்து முடிவு எடுக்கவில்லை. மகளிா் புரோ கபடி லீக் தொடங்க முயற்சிப்போம்.

2030 காமன்வெல்த் போட்டியில் கபடி இடம் பெற்றால் மிகவும் மகிழ்ச்சி தான். வரும் 2026 ஆசியப் போட்டியில் இந்திய அணியில் இடம் பெறும் அனைத்து வீரா்களும் பிகேஎல் தொடரில் ஆடியவா்களாக இருப்பா் என்றாா்.

செப். 29 முதல் ஆட்டத்தில் யுபி யோத்தாஸ்-குஜராத் ஜெயன்ட்ஸும், இரண்டாம் ஆட்டத்தில் ஹரியாணா ஸ்டீலா்ஸ்-டெல்லி தபாங் அணியும் மோதுகின்றன.

புரோ கபடி லீக் சீசன் 12, ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் நெட்வொா்க்-இல் நேரலையாகவும், ஜியோஹாட்ஸ்டாா்-இல் மாலை 7:30 மணிக்கு தொடங்கி ஒளிபரப்பாகிறது.

X
Dinamani
www.dinamani.com