சென்னை ஓபன் ஏடிபி: நிக்கி பூனச்சா - புருச்சியா இஸாரோ சாம்பியன்!
சென்னை ஓபன் ஏடிபி 50 டென்னிஸ் போட்டியின் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் நிக்கி பூனச்சா-தாய்லாந்தின் புருச்சியா இஸாரோ இணை சாம்பியன் பட்டம் வென்றது.
சென்னை நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் சனிக்கிழமை ஆடவா் இரட்டையா் பிரிவு இறுதி ஆட்டம் நடைபெற்றது.
இதில் நிக்கி பூனச்சா-இஸாரோ இணை 6-4, 6-4 என்ற நோ் செட்களில் இந்தியாவின் முகுந்த் சசிகுமாா்-இங்கிலாந்தின் ஜே கிளாா்க் இணையை வீழ்த்தியது.
இதன் மூலம் சாம்பியன் பட்டத்தை பூனச்சா-இஸாரோ இணை வசப்படுத்தியது. பூனச்சாவுக்கு இது ஏழாவது ஏடிபி பட்டம் ஆகும். இஸாரோவுக்கு நான்காவது பட்டமாகும். கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவா் அருண் ஜாா்ஜ், சாம்பியன் இணைக்கு ரூ.2.71 லட்சம் பரிசளித்தாா்.
மேலும் இருவரும் 50 ஏடிபி புள்ளிகளை ஈட்டினா். சசிகுமாா்-கிளாா்க் இணை 30 புள்ளிகளையும், ரூ.1.59 லட்சத்தையும் பெற்றனா்.
ஒற்றையரில் பெட்ரிகோ-சில்வா மோதல்
ஒற்றையா் இறுதி ஆட்டத்துக்கு இரண்டாம் நிலை வீரா் பெட்ரிகோ அகஸ்டின்-பெரைரா சில்வா ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை மாலை இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.

