ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது.
டி20 உலகக் கோப்பையின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
பாகிஸ்தானுக்கு முகமது ரிஸ்வானிடமிருந்து இந்த முறை நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. 15 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஃபகார் ஸமான் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
விக்கெட்டுகள் விழுந்தபோதிலும் பாபர் அஸாம் பாட்னர்ஷிப்பை கட்டமைத்தார். ஆனால், முகமது ஹபீஸ் அதிரடி காட்டி ரன் ரேட்டை உயர்த்தினார். வந்த வேகத்தில் 19 பந்துகளுக்கு 31 ரன்கள் விளாசிய அவர் 15-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு, அஸாம் அதிரடி காட்டத் தொடங்கினார். அவர் 40-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். கடைசி நேரத்தில் அதிரடி காட்ட வேண்டிய நேரத்தில் அஸாம் ஆட்டமிழந்தார். ஆனால், அனுபவ ஷோயப் மாலிக் சிக்ஸர்களை பறக்கவிட்டு ஸ்காட்லாந்தை பந்தாடினார்.
19-வது ஓவரில் 2 சிக்ஸர்கள் பறக்கவிட்டார் மாலிக். பின்னர் கடைசி ஓவர் சுழற்பந்துவீச்சாக அமைய அந்த ஓவரில் மட்டும் கடைசி 4 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரி அடித்தார் மாலிக். கடைசி சிக்ஸர் அடித்ததன் மூலம் 18-வது பந்தில் தனது அரைசதத்தை அவர் எட்டினார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மாலிக் 1 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உள்பட மொத்தம் 54 ரன்கள் விளாசினார்.