டி20 உலகக் கோப்பையில் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.
டி20 உலகக் கோப்பையில் அபுதாபியில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் இலங்கை, அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இலங்கைக்கு மிகவும் மோசமான தொடக்கம் அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர் குசால் பெரேரா முதல் பந்திலும், அடுத்து களமிறங்கிய தினேஷ் சண்டிமல் 6 ரன்களுக்கும், அவிஷ்கா பெர்னான்டோ முதல் பந்திலும் ஆட்டமிழந்தனர்.
இதனால், இலங்கை அணி இரண்டு ஓவர்களுக்குள் 8 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து சிக்கலில் இருந்தது.
இதையும் படிக்க | ரோஹித் அதிரடி: இந்தியா மிரட்டல் வெற்றி!
ஆனால், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசன்கா மற்றும் வனிந்து ஹசரங்கா சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்து ஆட்டத்தின் போக்கினையே மாற்றினர்.
4-வது விக்கெட்டுக்கு இந்த இணை 124 ரன்கள் சேர்த்தது. ஹசரங்கா 47 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிசன்காவும் அவரைத் தொடர்ந்து 47 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கேப்டன் தசுன் ஷனாகா கடைசி நேரத்தில் அதிரடி காட்டி 11 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார்.
மற்ற பேட்ஸ்மேன்கள் எவரும் 10 ரன்களைக்கூட தொடவில்லை.
இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.
அயர்லாந்து தரப்பில் ஜோஷ்வா லிட்டில் 4 விக்கெட்டுகளையும், மார்க் அடைர் 2 விக்கெட்டுகளையும், பால் ஸ்டிர்லிங் 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.