இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீது மதரீதியிலாக விமர்சனம் வைத்ததை ஏற்க முடியாது என அணித் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
கடந்த 24ஆம் தேதி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. இதில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக பந்துவீசிய இந்திய வீரர் முகமது ஷமியை அவரது மதத்தைக் குறிப்பிட்டு சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்துகள் பதியப்பட்டன.
இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில் முகமது ஷமிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
இதையும் படிக்க | மோடிக்கு முன் போப் ஆண்டவரை சந்தித்த இந்தியப் பிரதமர்கள்
இந்நிலையில் நாளை இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதிக்க்கொள்ள உள்ள நிலையில் முகமது ஷமிக்கு எதிரான கருத்துக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய விராட் கோலி, முகமது ஷமி மீது மதரீதியிலாக விமர்சனம் வைப்பவர்கள் முதுகெலும்பற்றவர்கள் எனத் தெரிவித்தார். மேலும் இந்திய அணிக்காக முகமது ஷமியின் பங்களிப்பை அறியாதவர்களே இத்தகைய விமர்சனத்தை முன்வைப்பதாகவும், இத்தகைய விமர்சனங்கள் ஏற்கத்தக்கவை அல்ல எனவும் தெரிவித்தார்.