ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

புதிய ரேஷன் அட்டை ஆவண சரிபார்ப்பில் சிக்கல்

சென்னை, ஜூலை 4: புதிய ரேஷன் அட்டை தருவதற்கான ஆவண சரிபார்ப்புப் பணி மாநிலம் முழுவதும் தொடங்கியுள்ள நிலையில், அப்பணியில் சிக்கல் எழுந்துள்ளது.  இதனால், தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள 8 லட்

Updated On :20 செப்டம்பர் 2012, 11:12 am

சென்னை, ஜூலை 4: புதிய ரேஷன் அட்டை தருவதற்கான ஆவண சரிபார்ப்புப் பணி மாநிலம் முழுவதும் தொடங்கியுள்ள நிலையில், அப்பணியில் சிக்கல் எழுந்துள்ளது.

 இதனால், தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள 8 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் முற்றிலும் ஒழிக்கப்படுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

 போலி ரேஷன் அட்டைகளை ஒழிக்க, வாக்காளர் அடையாள அட்டையை ஒரு முக்கிய ஆவணமாகச் சேர்த்து ஆவண சரிபார்ப்புப் பணியை மேற்கொண்டால் மட்டும்தான் இப்பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்று உணவு வழங்கல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

 தமிழகத்தில் சுமார் 30 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. இதில் சுமார் 2 கோடி ரேஷன் அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. சுமார் ஒன்றரை லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். ரேஷன் அட்டைகள் 5 ஆண்டு காலம் பயன்பாட்டில் இருக்கும். அந்த அட்டைகள் காலாவதியான பிறகு புதிய ரேஷன் அட்டை கொடுக்கப்படுவது வழக்கம்.

 இப்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் அட்டைகளின் பயன்பாட்டுக் காலம் 2009 டிசம்பருடன் முடிகிறது. புதிய ரேஷன் அட்டை கொடுப்பதற்கான முதல் கட்டப் பணிகள் மாவட்டந்தோறும் நடந்து வருகின்றன.

 வழக்கமாக, உணவு வழங்கல் துறை அதிகாரிகளுடன் ஆசிரியர்கள் உள்ளிட்ட பிற அரசுத் துறை ஊழியர்கள் நேரடியாக வீடு வீடாகச் சென்று புதிய ரேஷன் அட்டை ஆவண சரிபார்ப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

 இப்போது, ரேஷன் கடைக்குப் பொருள்கள் வாங்க வரும் நபர்களின் விவரங்கள் அங்கேயே சரிபார்க்கப்படுகின்றன. ஏற்கெனவே ரேஷன் கார்டில் உள்ள தகவல் மற்றும் முகவரி, தொலைபேசி எண் குறித்த விவரங்களை ரேஷன் கடை ஊழியர்கள் சரிபார்த்து விசாரித்துப் பதிவு செய்கின்றனர்.

 இதனால், புதிய ரேஷன் அட்டை ஆவண சரிபார்ப்புப் பணியில் நிறையச் சிக்கல்கள் எழுந்துள்ளன. ரேஷன் கார்டில் உள்ள பழைய விவரங்களை மட்டுமே ரேஷன் கடை ஊழியர்கள் மீண்டும் சரிபார்த்து வருகின்றனர். இதனால், போலி ரேஷன் அட்டைகளை ஒழிக்க முடியாது. மேலும், அப்பகுதி கவுன்சிலர்கள் வந்து ரேஷன் கடை ஊழியர்களை மிரட்டி போலிப் பெயர்களைச் சேர்க்கலாம் என்று கருத்தும் நிலவுகிறது.

 சுமார் 8 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் உள்ளன என்று தமிழக அரசே பகிரங்கமாகத் தெரிவித்துவிட்ட நிலையில், புதிய ரேஷன் அட்டை தருவதற்கான ஆவண சரிபார்ப்புப் பணிகள் துவங்கியுள்ளன.

 சென்னையில் தொடங்கியது: ""சென்னையில் சுமார் 7 ஆயிரம் ரேஷன் கடைகளில் ஜூலை 1 முதல் ரேஷன் அட்டை விவரம் சரிபார்ப்புப் பணி நடக்கிறது. இப்பணியில் சுமார் 17 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். காலை நேரம் முழுவதும் ஆவண சரிபார்ப்பு நடக்கிறது. பிற்பகலில்தான் அரிசி உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படுகின்றன. இதனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு வேலைப்பளு கூடிவிட்டது. ரேஷன் பொருள்களின் விநியோகமும் பாதிக்கிறது. ஆவண சரிபார்ப்புப் பணிக்குக் கூடுதலாக ஊக்கத் தொகையும் கிடையாது'' என்கின்றனர் ரேஷன் கடை ஊழியர்கள்.

 ஏற்கெனவே கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய ரேஷன் அட்டை தருவதற்கான ஆவண சரிபார்ப்புப் பணிகள் முடிந்துவிட்டன.

 வாக்காளர் அட்டையைக் காண்பிக்க வேண்டும்: இதுபற்றி உணவு வழங்கல்துறை அதிகாரிகள் கூறியதாவது:

 இப்போது புதிய ரேஷன் அட்டை தருவது தொடர்பான ஆவணம் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. ரேஷன் கடைக்கு வரும் நபர்களிடம், வாக்காளர் அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு நிர்ப்பந்தித்து ஆவண சரிபார்ப்பு பணியைச் செய்திட வேண்டும். அப்போதுதான் போலி அட்டைகளை ஒழிக்க முடியும். இல்லையெனில் ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் ஒரு அரசு ஊழியரை நியமித்து, ஆவண சரிபார்ப்புப் பணியை மேற்கொள்ளலாம்'' என்று அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.