தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் ஏப்ரல் 1-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், 1095 நேரடி காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக அறிவித்திருந்தது. இதில், வட்டார காவல் நிலையங்களுக்கு 810 பேரும், ஆயுதப் படைக்கு 161 பேரும், தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு 124 பேரும் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஆயுதப் படை மற்றும் சிறப்பு காவல் படையில் உதவி ஆய்வாளர்களாகப் பணியாற்றுபவர்கள் 2008-ம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்று பணிக்கு வந்தவர்கள். அப்போது நடைபெற்ற தேர்வில் 744 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில், 152 பேருக்கு வட்டார காவல் நிலையங்களிலும், 400 பேருக்கு ஆயுதப் படையிலும், மீதமுள்ள 192 பேருக்கு தமிழ்நாடு சிறப்பு காவல் படையிலும் பணி நியமனம் வழங்கப்பட்டது.