நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரயில் டிக்கெட் விற்க தனியாருக்கு அனுமதி: பயணிகள் அதிருப்தி

சென்னை, ஆக. 5: ரயில் டிக்கெட்டுகளை விற்க தனியாருக்கு அனுமதி வழங்கும் (ஜனசாதாரண் டிக்கெட் புக்கிங் சேவா (ஜே.டி.பி.எஸ்.) திட்டம் பயணிகளிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. புறநகர் மற்றும் பாசஞ்ச

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:04 am

ச. குமரன்

சென்னை, ஆக. 5: ரயில் டிக்கெட்டுகளை விற்க தனியாருக்கு அனுமதி வழங்கும் (ஜனசாதாரண் டிக்கெட் புக்கிங் சேவா (ஜே.டி.பி.எஸ்.) திட்டம் பயணிகளிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

புறநகர் மற்றும் பாசஞ்சர் ரயில்களில் பயணம் செய்ய ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் ஏராளமான பயணிகள் தினமும் காத்திருக்கின்றனர். இதனால், விரக்தியடைந்த பயணிகள் கூடுதலாக டிக்கெட் கவுன்ட்டர்களைத் திறப்பதோடு,ஊழியர்களையும் நியமிக்க வேண்டும் என கோரி வந்தனர்.

இதையடுத்து, டிக்கெட் கவுன்டர்களில் நெரிசலைத் தவிர்க்கும் வகையில்,சென்னை கோட்டத்தில் மட்டும் 40 இடங்களில் தானியங்கி முறையில் டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

24 மணி நேர சேவையை வழங்கும் வகையில் ஏடிவிஎம் என்ற தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களில் பயன்படுத்த ஸ்மார்ட் கார்டுகளை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியது.

குறைந்தபட்சம் ரூ. 50 முதல் ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள இந்த ஸ்மார்ட் கார்டுகளை அந்தந்த ரயில் நிலையங்களில் எளிதில் பெறலாம். இது 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும். இதற்கு காப்புத் தொகையாக ரூ. 30 செலுத்தலாம். இந்தத் தொகையைத் திரும்பப் பெறலாம்.

இந்த ஸ்மார்ட் கார்டுகளுக்கு ரூ. 50 முதல் ரூ. 1,000 வரை மதிப்பை ஏற்ற (டாப்-அப்)இயலும்.

நினைவுச் சின்னங்களாக மாறிய இயந்திரங்கள்:

தானியங்கி டிக்கெட் இயந்திரங்களில் இந்த ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி, புறநகர் மின் ரயில்களில் பயணம் செய்ய முதல் வகுப்பு, 2-ம் வகுப்பு டிக்கெட்டுகளைப் பெறலாம். எனினும், இந்த இயந்திரங்கள் மக்களைக் கவராததால், சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நினைவுச் சின்னங்களாக இப்போது நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், புறநகர் மின் ரயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளை விற்க தனியாருக்கு அனுமதி வழங்கும் ஜனசாதாரண் டிக்கெட் புக்கிங் சேவா (ஜே.டி.பி.எஸ்.) திட்டத்தை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியது.

இதன்படி, முதல்கட்டமாக அரக்கோணம், பெரம்பூர், திருவள்ளூர், அம்பத்தூர் ஆகிய இடங்களில் தனியாருக்கு டிக்கெட் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டு,தனியார் மையங்களும் தொடங்கப்பட்டுள்ளன. இதில் அரக்கோணத்தை தவிர இதர இடங்களில் தொடங்கப்பட்டுள்ள மையங்கள் தூங்கி வழிகின்றன.

இந்த நிலையில், சென்னை ரயில்வே கோட்டத்தில் ஆவடி, தாம்பரம், குரோம்பேட்டை, கடற்கரை, செங்கல்பட்டு உள்ளிட்ட 50 இடங்களில் தனியார் டிக்கெட் வழங்கும் மையங்களை தொடங்க விரைவில் அனுமதி வழங்கப்பட உள்ளது. இந்த மையங்களில் பாசஞ்சர் மற்றும் இதர ரயில்களில் முன்பதிவு செய்யாத டிக்கெட்டுகளை பயண நாளுக்கு 3 நாள்களுக்கு முன்னதாக பெறலாம்.

மெட்ரிகுலேஷன் மற்றும் பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற 18 வயதுக்கு மேற்பட்ட உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி பெற ரூ. 2 லட்சம் வரை முன்பணம் செலுத்த வேண்டும்.

டிக்கெட் வழங்கும் சிறிய இயந்திரம், கம்ப்யூட்டர், பிஎஸ்என்எல் தொலைபேசி உள்ளிட்ட வசதிகளுடன் சொந்த கட்டடம் இருந்தால் இந்த மையத்தைத் தொடங்க அனுமதி பெறலாம்.

மறைமுக கட்டணமா?:

பயணிகளிடம் விற்கப்படும் டிக்கெட்டுக்கு தலா ரூ. 1 மட்டும் சேவைக் கட்டணமாக பெற அனுமதி உண்டு. எனினும், இந்த டிக்கெட்டுகளை அந்தந்த ரயில் நிலையங்களில் இருந்து முன்பணம் செலுத்தி முகவர்கள் பெறலாம்.

கடந்த 2007-08 ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவாறு, புறநகர் மின் ரயில்களில் கட்டணம் குறைந்தபட்சம் டிக்கெட்டுக்கு தலா ரூ. 1 வரை குறைக்கப்பட்டது. இது பயணிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், ரயில் நிலையங்களில் கூடுதல் டிக்கெட் கவுன்ட்டர்களைத் திறக்காமல்  புறக்கணிப்பதோடு, ஊழியர்களை நியமிப்பதிலும் ரயில்வே துறை தயக்கம் காட்டி வருகிறது. இந்த நிலையில், தனியார் மையங்களில் சேவைக் கட்டணமாக டிக்கெட்டுக்கு ரூ. 1  கூடுதலாக வசூலிப்பது மறைமுகமாக கட்டண உயர்வுக்கு வழிவகுப்பதாக உள்ளது என்று பெரம்பூரைச் சேர்ந்த பயணி கெüசல்யா தெரிவித்தார்.

மதிப்பு கூட்டும் சேவை என்ற பெயரில், முன்பதிவு செய்வதற்கான அனுமதியைக் கூட தனியாருக்கு ரயில்வே வழங்கக் கூடும். இதனால், முறைகேடுகள் நடக்கவும் வாய்ப்புள்ளது என்கிறார் தெற்கு ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி முருகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.