சென்னை, ஜூன் 11: பெரியாருக்கு சட்டப்படி வாரிசுகள் இல்லாததால் அவருடைய பெயரில் இருக்கும் சொத்துகளை தமிழக அரசு அரசுடமையாக்க வேண்டும். ஜூன் 30-ம் தேதிக்குள் இதைச் செய்யாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்கப்படும் என்று பெரியார் திராவிடர் கழகம் கூறியுள்ளது.
பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியாரின் குடி அரசு இதழ் கட்டுரை தொகுப்பை சென்னையில் வெளியிடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் பெரியார் திராவிடர் கழகத்தின் வழக்கறிஞர் துரைசாமி பேசியது:
1978-ல் திருவாரூர் தங்கராசு பெரியாரின் சொத்துகள் அனைத்து திராவிடர்களுக்கும் சொந்தமானதாக இருக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். அப்போது சட்ட நுணுக்கங்களைப் பயன்படுத்தியதால் அந்த வழக்கு தள்ளுபடியானது.
பெரியார் தான் உருவாக்கிய பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனத்தை சங்கங்களின் சட்டத்தின் கீழ்தான் பதிவு செய்தார். அறக்கட்டளையாக அதை பதிவு செய்யவில்லை. பெரியார் தனது பெயரில் உள்ள சொத்துகளை பத்திரம் மூலம் அந்த அமைப்புக்கு மாற்றவில்லை.
அவரது பெயரில் உள்ள சென்னை பெரியார் திடல், ஈரோடு பெரியார் மன்றம், திருச்சி பெரியார் மாளிகை உள்ளிட்ட சொத்துகள் உள்ளன. அவருக்கு சட்ட வாரிசுகள் இல்லாததால் இந்து வாரிசுரிமைச் சட்டப்படி, அவை தமிழக அரசுக்கு போய்ச் சேர வேண்டும். எனவே, அரசு அவரது பெயரில் உள்ள சொத்துகளை அரசுடைமையாக்க வேண்டும்.
ஜூன் 30-ம் தேதிக்குள் அதைச் செயல்படுத்த வேண்டும். அப்படியில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, துணைத் தலைவர் திருவாரூர் தங்கராசு, பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன், செயலர் கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.