அதிமுக தலைமைக்கு எதிராக விளம்பரம் தரவில்லை: விஜயகாந்த்

சென்னை, ஜன. 8: அ.தி.மு.க. தலைமையை விமர்சிக்கும் வகையில் பத்திரிகையில் வெளியான விளம்பரத்தை தே.மு.தி.க.வினர் தரவில்லை என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.  வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல
அதிமுக தலைமைக்கு எதிராக விளம்பரம் தரவில்லை: விஜயகாந்த்
Updated on
1 min read

சென்னை, ஜன. 8: அ.தி.மு.க. தலைமையை விமர்சிக்கும் வகையில் பத்திரிகையில் வெளியான விளம்பரத்தை தே.மு.தி.க.வினர் தரவில்லை என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

 வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அணியில் தே.மு.தி.க. சேரக் கூடும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் சூழ்நிலையில், இந்த அறிக்கை வெளியாகி இருப்பது கூட்டணி வாய்ப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் இருப்பதாகக் கருதப்படுகிறது.

 இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

 கருணாநிதி தலைமையில் இப்போது தமிழகத்தில் நடந்து வரும் மோசமான ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற குறிக்கோளுடன் சேலத்தில் உரிமை மீட்பு மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இந்த மாநாடு தொடர்பாக, முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தலைமையை விமர்சித்து தே.மு.தி.க. நிர்வாகிகள் பெயரில் ஒரு விளம்பரம் வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது. தே.மு.தி.க.விற்கும் அந்த விளம்பரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இப்போதுள்ள ஆட்சிக்கு எதிரானவர்கள் ஒன்று சேர்ந்துவிடக்கூடாது என்ற தீய நோக்கத்தில், ஏற்கெனவே ஊழலில் திளைக்கும் ஆளும் வர்க்கத்தினர் வேண்டுமென்றே திட்டமிட்டு நச்சு நினைப்போடு இந்த விளம்பரத்தை வெளியிட்ள்ளனர். வரும் தேர்தலில் இவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட இருக்கிறார்கள்.

 தே.மு.தி.க. நிர்வாகிகள் பெயரில் இந்த போலி விளம்பரத்தை வெளியிட்டவர்களைக் கண்டுபிடித்து, வழக்கு தொடரப்படும். தே.மு.தி.க.வைப் பொருத்தவரை தெளிவான அரசியல் சிந்தனையுடன் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. எக்காரணத்தைக் கொண்டும் கருணாநிதி ஆட்சி மீண்டும் வர தே.மு.தி.க. துணை போகாது என்பதை தமிழக மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என விஜயகாந்த் கூறியுள்ளார்.

 ""ஆட்சியைப் பிடிக்க துடிக்கும் சுயநலவாதிகளை விரட்டியடிக்கும் வரை தூங்காது எங்கள் விழி! சுயநலக் கூட்டத்தின் வேரறுக்க, நல்லாட்சி மலர்ந்திட தோள்கொடுக்க ஒன்றுபடுவோம்! வென்றுவிடுவோம்!'' என்று அந்த விளம்பரம் பிரசுரம் ஆகியிருந்தது. ""நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்'' என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது. இந்த விளம்பரம் தே.மு.தி.க. நிர்வாகிகள் ஐந்து பேரின் பெயர்களில் வெளியாகியுள்ளது. ஆனால், இவர்களின் பெயரில் வேண்டுமென்றே யாரோ விளம்பரம் தந்திருப்பதாக விஜயகாந்த் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com