டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

'அண்ணா பல்கலை. வளாகத்தில் கலந்தாய்வின்போது விளம்பர அரங்குகள் கூடாது'

சென்னை, ஜூன் 24: மாணவர்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில், கலந்தாய்வின்போது அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் விளம்பர அரங்குகள் அமைப்பதற்கு இம்முறை அனுமதி மறுக்கப்படுமா

Updated On :20 செப்டம்பர் 2012, 2:48 am

சென்னை, ஜூன் 24: மாணவர்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில், கலந்தாய்வின்போது அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் விளம்பர அரங்குகள் அமைப்பதற்கு இம்முறை அனுமதி மறுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பேராசிரியர்கள் மற்றும் பெற்றோரிடையே எழுந்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம், அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழான பி.இ. இடங்களுக்கு ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறை மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்தக் கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கலந்தாய்வின்போது, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பல்வேறு சுயநிதி பொறியியல் கல்லூரிகள் விளம்பர அரங்குகளை அமைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகம் இதற்கான அனுமதியை அளித்து வருகிறது. இந்த முறையும் வளாகத்துக்குள் அரங்குகளை அமைப்பதற்கு அனுமதி தர அண்ணா பல்கலைக்கழகம் முடிவு எடுத்துள்ளதாகப் பேராசிரியர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு அரங்குகளை அமைக்கும் கல்லூரிகள், கவனத்தை ஈர்க்கும் வகையில் கல்லூரி குறித்த விவரங்களை வண்ண அட்டைகளில் அச்சடித்து விநியோகிப்பது மற்றும் வசீகரப் பேச்சு மூலம் மாணவர்களைக் கவர்கின்றனர். குறிப்பிட்ட கல்லூரியைத் தேர்வு செய்ய ஏற்கெனவே முடிவு செய்து கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள், இந்த அரங்குகளில் செய்யப்படும் விளம்பரம் காரணமாக குழம்பும் நிலைக்கு ஆளாவதாக கடந்த ஆண்டே புகார் தெரிவித்தனர்.

மேலும் அரங்குகள் அமைத்திருக்கும் சில கல்லூரிகள் மாணவர்களைக் கவர்வதற்காக, கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த பொய்யான கருத்துகளை தருவதாகவும் புகார்கள் எழுந்தன. நகர்ப்புற மாணவர்கள் இவர்களிடம் ஓரளவு விழிப்புடன் இருந்தபோதும், கிராமப் புறங்களிலிருந்து வரும் மாணவர்களும், அவர்களுடைய பெற்றோரும் இவர்களுடைய பேச்சில் மயங்கி ஏமாறும் நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த அரங்குகளைத் தவிர, அண்ணா பல்கலைக்கழகத்தை ஒட்டிய சாலை நெடுகிலும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த விளம்பரப் பிரதிநிதிகள், துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது வாடிக்கையாக உள்ளது.

இந்தத் தொடர் புகார்களை அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. மாறாக, இந்த அரங்குகளால் மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லையென்றும்,  பல்கலைக்கழக ஊழியர்கள் மறைமுகமாக இவர்களைக் கண்காணித்து வருகின்றனர் என்றும் கூறினர். இது குறித்து அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறியது: சிறிய வருமானத்துக்காக அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொள்ளும் இதுபோன்ற நடவடிக்கையால், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், ஏற்கெனவே கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வரும் சுயநிதிக் கல்லூரிகள், இந்த விளம்பர அரங்குகள் மூலம் கூடுதல் லாபம் அடைந்து வருகின்றன. அதாவது, கல்லூரியில் 100 சதவீத இடங்களை நிரப்பி, கல்லூரிக்கான தொடர் அனுமதி பெறுவதிலும், கல்லூரி தர நிர்ணயத்திலும் முன்னிலை பெற்றுவிடுகின்றன. எனவே, மாணவர் நலனில் அக்கறைகொண்டு, கலந்தாய்வின்போது விளம்பர அரங்குகள் அமைக்க பல்கலைக்கழகம் அனுமதிக்கக் கூடாது என்றார்.இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறுகையில், இம்முறை விளம்பர அரங்குகள் அமைக்க அனுமதி தருவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.