டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

தமிழ் வழி மாணவர்கள் தமிழில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும்: மாணவர்கள் அதிர்ச்சி

 சென்னை, மார்ச் 25: தமிழ் வழி மாணவர்கள் தமிழில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும் என்ற சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக அறிவிப்பால் மாணவ, மாணவிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.  தமிழ் வழியில் படித்து

Updated On :20 செப்டம்பர் 2012, 3:18 am

 சென்னை, மார்ச் 25: தமிழ் வழி மாணவர்கள் தமிழில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும் என்ற சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக அறிவிப்பால் மாணவ, மாணவிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

 தமிழ் வழியில் படித்து வரும் மாணவர்கள், பொறியியல் படிப்புகளை எளிதில் புரிந்து படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 2010-11 கல்வியாண்டில் தமிழ் வழி பொறியியல் படிப்புகளை தமிழக அரசு அறிமுகம் செய்தது.

 சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் இந்த தமிழ் வழி பி.இ. படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன. முதல்கட்டமாக பி.இ. மெக்கானிக்கல் மற்றும் சிவில் படிப்புகளில் மட்டும் தமிழ் வழிக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 தமிழக அரசின் இந்த திட்டம் மாணவ, மாணவிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழ் வழியில் படித்த மாணவர்கள் மட்டும் அல்லாமல், முதல் தலைமுறை மாணவர்களும் போட்டி போட்டிக்கொண்டு இதில் சேர்ந்தனர்.

 கலந்தாய்வின்போது உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி அளித்த பேட்டியில், ஆங்கில வழி மாணவர்கள் ஆங்கிலம் - தமிழ் கலந்து தேர்வு எழுதுவதுபோல், தமிழ் வழி மாணவர்களும் தமிழ் - ஆங்கிலம் கலந்து தேர்வு எழுதலாம் என்று கூறினார்.

 ஆனால், 2010-11 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்குப் பிறகு அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய முதல் சுற்றுத் தேர்வில், தமிழ் வழி மாணவர்களுக்கு தூய தமிழில் கேள்விகள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கக்ப்பட்டன.

 மேலும் பல்கலைக்கழக துறைகளைச் சேர்ந்த தலைவர்கள் சிலர் தமிழில் மட்டுமே தேர்வு எழுதவேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, தமிழ் வழி மாணவர்கள் தமிழ் - ஆங்கிலம் கலந்து தேர்வு எழுதலாம் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் மீண்டும் கூறினார்.

 இந்த நிலையில், தமிழ் வழி மாணவர்கள் தமிழில் மட்டுமே தேர்வு எழுதவேண்டும் என அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இப்போது சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இது, மாணவ, மாணவிகளிடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் எந்தெந்த பயிற்று மொழிகளில் சேர்க்கப்பட்டனரோ, அந்த மொழிகளிலேயே பருவத் தேர்வுகளை எழுத வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து பொறியியல் கல்லூரி மாணவி காயத்ரி கூறியது:

 தமிழ் வழியில் படித்து வரும் மாணவ, மாணவிகள் புரிந்து படிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான், தமிழக அரசு இந்த புதியத் திட்டத்தைக் கொண்டு வந்தது. இதே எண்ணத்தோடுதான் நாங்களும், தமிழ் வழி படிப்புகளில் சேர்ந்தோம்.

 ஆனால், பல்கலைக்கழகம் தொடர்ந்து இதே போல் தமிழில் தேர்வு எழுத வேண்டும் என்று வலியுறுத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சில தொழில்நுட்ப வார்த்தைகளையும், சூத்திரங்களையும் ஆங்கிலத்தில் படிப்பதும், எழுதுவதும்தான் எளிது. எனவே, தமிழ் - ஆங்கிலம் கலந்து தேர்வு எழுத பல்கலைக்கழகம் அனுமதிக்க வேண்டும் என்றார்.

 இதுகுறித்து தமிழ் வழி பொறியியல் மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட துறையில் எந்த அளவு அறிவு கூடியுள்ளது என்பதை கண்டறியும் அளவீடுதான் தேர்வு. இதில் மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பது எந்தவிதத்தில் நியாயம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.