வேடந்தாங்கலாகியது ராமக்காள் ஏரி!

தருமபுரி, செப் 12: தருமபுரி அருகே உள்ள ராமக்காள் ஏரி வேடந்தாங்கலாக மாறி வருகிறது. ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் இப்போது முகாமிட்டுள்ளன. இதில் புதிய வரவாக "நீளவால் இலைக் கோழி' (pheasant-tailed jacana) எ
வேடந்தாங்கலாகியது ராமக்காள் ஏரி!
Updated on
2 min read

தருமபுரி, செப் 12: தருமபுரி அருகே உள்ள ராமக்காள் ஏரி வேடந்தாங்கலாக மாறி வருகிறது. ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் இப்போது முகாமிட்டுள்ளன. இதில் புதிய வரவாக "நீளவால் இலைக் கோழி' ( pheasant-tailed jacana ) என்ற பறவை வந்துள்ளது. இவை இனப் பெருக்கத்துக்காக தருமபுரி பகுதி நீர் நிலைகளில் முகாமிட்டுள்ளதாக பறவையின ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

தருமபுரி மாவட்டம் மலைகளும், வனப் பகுதிகளும் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள நீர் நிலைகளைத் தேடி வெளிநாட்டுப் பறவைகள் சீசனுக்கு தகுந்தபடி வந்து செல்கின்றன.

பறவைகள் முகாமிடும் இடங்களில் பிரதான ஏரியாக அமைந்துள்ளது தருமபுரி அருகே உள்ள ராமக்காள் ஏரி. இங்கு மஞ்சள் மூக்கு நாரை ( Painted stork ), சின்னக் கொக்கு, சிறிய பச்சி கொக்கு (க Little Heron ), கறுப்பு மூக்கு நாரை ( African openbill ),செங்கால் நாரை, நத்தைக் கூடை நாரை ( Open bill stork ), நீர்க் கோழி உள்ளிட்ட வெளிநாட்டுப் பறவைகள் இப்போது முகாமிட்டுள்ளன. இதில் புதிய வரவாக நீள வால் இலைக் கோழி பறவைகள் கடந்த சில நாள்களாக முகாமிட்டுள்ளன.

நீள வால் இலைக் கோழி அல்லது வலன் தாமரா கோழி என அழைக்கப்படும் இந்தப் பறவை வெள்ளை, மஞ்சள், சாக்லேட் பழுப்பு, கறுப்பு ஆகிய நிறங்களின் கலவையைக் கொண்டுள்ளது. இதன் வால் பகுதி ஓர் அடி நீளத்தில் நீண்டு பின்னர் வளைந்து பிறை வடிவில் உள்ளது. கால்கள் சிலந்தி வலைகளைப் போல் உள்ளன.

முகம், முன் கழுத்துப் பகுதி வெள்ளையாகவும், பின் கழுத்துப் பகுதி தங்க நிறத்திலும் உள்ளன.

இத்தனை நிறங்களைக் கொண்ட இந்தப் பறவை பறக்கும் போது, அதன் அடிப் பகுதி வெள்ளை நிறத்தில் காண்பதற்கு ரம்மியமாக உள்ளது. பறக்கும் தருணத்தில் வால் பகுதி பூமியை நோக்கி கீழ் நோக்கி இருக்கும். ஆண், பெண் பறவைகள் இரண்டுமே ஒரே மாதிரியான தோற்றம் கொண்டவை.

ராமக்காள் ஏரி மட்டுமல்லாது, சுற்றுப் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளிலும் கடந்த சில தினங்களாக நீள வால் இலைக் கோழியைக் காண முடிகிறது. இவை இந்தியாவில் கேரளம், அசாம் ஆகிய மாநிலங்களிலும், இலங்கை, மலேசியா, மியான்மர், தென் சீனா ஆகிய நாடுகளிலும் அதிக அளவில் காணப்படுகின்றன. நீள வால் இலைக் கோழி மட்டுமல்லாமல் வேறு சில வெளிநாட்டுப் பறவைகளும் இந்த நீர் நிலைகளில் முகாமிட்டுள்ளன.

இந்தப் பறவைகள் குறித்து பறவையின ஆராய்ச்சியாளர் ஆர். செந்தில்குமாரிடம் கேட்ட போது ஒவ்வொரு பறவையின் பெயர்களைத் தெரிவித்து விளக்கமளித்தார்.

இதற்கிடையே, தருமபுரியின் வேடந்தாங்கலாக விளங்கும் ராமக்காள் ஏரியில் இத்தகைய பறவையினங்கள் மட்டுமல்லாது அனைத்து வகைப் பறவைகளும் வந்து செல்வதற்கேற்ற சூழல்களை உருவாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com