சென்னை மாநகரில் தேவை அதிகமுள்ள பகுதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள 26 வழித் தடங்களில் மினி பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அண்மையில் ஆய்வு மேற்கொண்ட ஊரக வளர்ச்சிக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் தமிழக அரசு இத் தகவலை தெரிவித்துள்ளது.
மாநகர பஸ்கள் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் மக்களை, பஸ் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களுடன் இணைக்கும் வகையில் சென்னையில் மினி பஸ்கள் இயக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. முதல்கட்டமாக 100 மினி பஸ்கள் இயக்கப்படும் என்றும், பின்னர் தேவைக்கேற்ப இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் அறிவித்தது.
இந்த மினி பஸ்களுக்கான சேசிஸ் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெறப்படுகிறது. கரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் "பாடி' கட்டப்பட்டு வருகிறது. இப்போது 25 பஸ்கள் தயார் நிலையில் உள்ளன. இம்மாத இறுதியில் இந்த பஸ்கள் இயக்கத்துக்கு வர வாய்ப்புள்ளதாக மாநகரப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, ஊரக வளர்ச்சிக்கான நாடாளுமன்ற நிலைக் குழு, மினி பஸ்கள் குறித்த ஆய்வை சென்னையில் ஜூன் 9-ஆம் தேதி மேற்கொண்டது. அப்போது பல்வேறு கேள்விகளை அவர்கள் எழுப்பியுள்ளனர்.
அப்போது, சென்னையில் அறிமுகம் செய்யப்பட உள்ள 100 மினி பஸ்களும் மிகவும் தேவையுள்ள பகுதிகளாக தெரிவு செய்யப்பட்ட 26 வழித் தடங்களில் மட்டும் இயக்கப்படும். இப்போது 25 பஸ்கள் தயார் நிலையில் உள்ளன. எஞ்சிய பஸ்களும் விரைவில் தயாராகிவிடும் எனத் தெரிவிக்கப்பட்டதாக, போக்குவரத்துத் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








