

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்குத் தலைவர் பதவி தருவது அவருடைய சகோதரியான எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார்.
சமுதாயத்துக்கு என் ஆயுள் உள்ளவரை பாடுபடுவேன். எனக்குப் பிறகு ஸ்டாலின்தான். அவரை மறந்துவிடாதீர்கள் என்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கருணாநிதி பேசினார்.
இந் நிலையில், சென்னை சிஐடி காலனியில் உள்ள இல்லத்தில் கனிமொழி தன் பிறந்த நாளை சனிக்கிழமை கொண்டாடினார். அப்போது அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஸ்டாலின்தான் அடுத்த தலைவர் என்று அப்பா (கருணாநிதி) கூறியிருக்கிறார். ஸ்டாலினின் சகோதரி என்ற அடிப்படையில் எனக்கு அது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். மக்களவைத் தேர்தலில் திமுக அமோக வெற்றிபெறுவோம் என்றார் அவர்.
கருணாநிதியின் கருத்து தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மு.க.அழகிரி, "திமுக ஒன்றும் மடம் அல்ல. தலைவர் பதவிக்கான தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறும்' என்று தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.