கல்வெட்டியல் ஆராய்ச்சியாளரும் தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான ஐராவதம் மகாதேவன், தமிழ் அறிஞர் தமிழண்ணல் ஆகியோருக்கு அக்டோபர் 9-ஆம் தேதி செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தொல்காப்பியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
செக். குடியரசைச் சேர்ந்த அறிஞர் ஜரோஸ்லாவ் வசேக், இங்கிலாந்தைச் சேர்ந்த அறிஞர் ஜான் ரால்ஸ்டன் மார் ஆகியோருக்கு குறள் பீட விருது வழங்கப்பட உள்ளது.
இதே போன்று 10 பேருக்கு இளம் அறிஞர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
புது தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த விருதுகளை வழங்க உள்ளார்.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலம் குடியரசுத் தலைவர் செம்மொழி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.