

திமுகவுக்கு என்று ஒரு பாரம்பரியம் உள்ளது ஆனால் சிலருக்கு கட்சி ஆரம்பிக்கும்போதே, சிலருக்கு கட்சி ஆரம்பிக்காமலேயேகூட முதல்வராகும் ஆசை ஏற்பட்டுள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
விழுப்புரத்தில் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் கட்சியின் இளைஞர்கள் அமைப்பு மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இம் மாநாட்டுக்கு அமைப்பின் தலைவர் பொன்.குமார் தலைமை தாங்கினார். இம் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது:
இக் கட்சியின் தலைவர் பொன்.குமார் கட்டடத் தொழிலாளர்களுக்காக எம்.ஜி.ஆர். காலத்திலேயே பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். சில சமயம் சிறைக்குச் செல்லும் நிலைûமைக்கு கூட ஆளானார். ஆகஸ்டு 12-ல் இளைஞர்கள் தினம். ஆனால் இந்த மாநாடு ஆகஸ்டு 19-ம் தேதி நடைபெறுகிறது. என்னால் ஏற்கனவே கொடுக்கப்பட்ட தேதியை மாற்ற முடியவில்லை. இதனால் இம் மாநாடு ஆகஸ்டு 19-ம் தேதி நடைபெறுகிறது.
திமுக என்ற கட்சி பதவிக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி கிடையாது. இக் கட்சி உடனடியாக தேர்தலில் போட்டியிடவும் இல்லை. அறிஞர் அண்ணா வாக்கெடுப்பு நடத்தி தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்தார். ஆனால் சிலருக்கு கட்சி ஆரம்பிக்கும்போது முதல்வராக வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. மேலும் சிலருக்கு கட்சி ஆரம்பிக்கவே இல்லை, அதற்குள் முதல்வர் ஆக வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. திமுக பொது மக்களுக்காக பாடுபட்டு வருகிறது. இந்த அமைப்பின் பல்வேறு அணிகள் இருந்தாலும் இளைஞர் அணி திறம்பட செயல்படுகிறது. அதற்கு நான் காரணம் அல்ல. இளைஞர்களின் திறமையே காரணம்.
தற்போது உள்ள அரசு மக்கள் நலப் பணியாளர்களை பணியில் இருந்து நீக்கியது. அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது என்றார். இக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இம் மாநாட்டுக்கு முன் ரயில் நிலையத்தில் இருந்து கலைஞர் அறிவாலயம் வரை தமிழ்நாடு விவசாய தொழிலாளர் கட்சியின் இளைஞர் அமைப்பினர் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.