நெல்லையில் குறைதீர் கூட்டம்: விவசாயிகள் வெளிநடப்பு: வனவிலங்குகளைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளி்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். வனவிலங்குகளைக்


திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளி்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். வனவிலங்குகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து முழக்கங்களையும் எழுப்பினர்.
திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் விஜயகுமார் தலைமை வகித்தார். வேளாணை இணை இயக்குநர் பெருமாள், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ராஜன்ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள தோட்டங்கள், விவசாய நிலங்களில் வனவிலங்குகளின் தொல்லை மிகவும் அதிகமுள்ளது. அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக பலமுறை எடுத்துக்கூறியும் வனத்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க முயன்றபோது, யாரும் வராததால் விவசாயிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நஷ்டஈடு வழங்க வேண்டும். ஓராண்டு காலமாக வனத்திற்குள் செல்லாமல் விவசாயப் பயிர்களைச் சேதப்படுத்தி வரும் யானைகளை வனத்துக்குள் அனுப்ப தனிப்படை அல்லது அதிரடிப்படை அமைக்க வேண்டும். மேக்கரை முதல் கடையநல்லூரின் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் வனவிலங்குகளின் பயிர்ச் சேதத்தைக் கண்டறிய கோட்டாட்சியர், வட்டாட்சியர் தலைமையில் தனிக்குழு அமைக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நமக்குநாமே திட்டத்தின் கீழ் அரசு மானியத்தில் மின்வேலி அல்லது சூரிய சக்தி மின்வேலி அமைக்க மானியம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் வனத்துறை மூலம் தென்னங்கன்றுகள், நெல்லி, தேக்கு போன்ற மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
விவசாயிகளுக்கு சேதம் ஏற்படும்போது சேத விவரங்கள் மற்றும் சேதமதிப்பீடு அனைத்தும் வனத்துறை மற்றும் வேளாண்மைத்துறையின் பதிவேட்டில் பதிவு செய்து அதற்கான ஒப்புதல் சீட்டை விவசாயிகளுக்கு வழங்கவும், மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய பயிக் காப்பீட்டுத் திட்டத்தில் வனவிலங்குகளின் பயிர்ச்சேதத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பின்னர் விவசாயிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். வனத்துறை ஊழியர்கள் வந்தால் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்போம் என விவசாயிகள் கூறியதால் சுமார் 15 நிமிடத்திற்கு குறைதீர்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் வனத்துறை சார்பில் கோட்ட அலுவலர் பேரின்பகுமார் வந்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.
அவர் கூறுகையில், வடகரை பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் யானைகள் உள்ளிட்ட வனவிலங்கள் விளைநிலங்களுக்குள் வராமல் தடுக்க அகழி வெட்டும்பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் சுமார் 200 மீட்டர் தொலைவு பாறையாக உள்ளதால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அந்த வழியைப் பயன்படுத்தி வனவிலங்குகள் புகுந்து விடுகின்றன. அகழி வெட்டும் பணியைத் துரிதமாக முடிக்க அறிவுறுத்தப்படும் என்றார். அதன்பின்பு விவசாயிகளின் கேள்விகளுக்கு அதிகாரிகள் பதிலளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...