/

பழனி மலைப்பகுதிகளில் எலுமிச்சைக்கு விலை அதிகம்

News image
Updated On :30 நவம்பர் 2014, 1:25 pm

என்.​ அங்​கு​பாபு

பழனியை அடுத்த கொடைக்கானல் மலைப்பகுதிகளில் விலையும் எலுமிச்சம்பழத்துக்கு நல்ல விலை கிடைக்கும் நிலையில் காபிக்கொட்டைக்கு குறைந்த விலை கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

பழனியை அடுத்த கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மலைவாழை, கேரட், முட்டைக்கோஸ், ஆரஞ்சு, எலுமிச்சை, காபி, பிளம்ஸ், சப்போட்டா மற்றும் பேரிக்காய் உள்ளிட்ட ஏராளமான காய்கள், பழவகைகள் விளைவிக்கப்படுகிறது. இவை பெருமளவு பழனி நகருக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.  கடந்த இரண்டு வருடங்களாக பருவமழை பொய்த்ததால் மலைப்பகுதிகளில் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வந்தது.  இந்நிலையில் கடந்த தீபாவளியின் போது பெய்த மழையால் மலைப்பகுதிகளில் பள்ளத்தாக்குகள், ஓடைகளில் நீர்வரத்து துவங்கியுள்ளது.  இதனால் வாடியிருந்த பயிர்கள் தற்போது புத்துணர்வுடன் வளர்ந்து வருகிறது. 

தற்போது கொடைக்கானல், தாண்டிக்குடி, பாச்சலூர், பண்ணைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஆரஞ்சு, எலுமிச்சை, காபி ஆகியன சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.  பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் உள்ள சவரிக்காடு என்ற பகுதியில் அதிகஅளவு எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டு பழனிக்கு மொத்த கமிஷன் கடைகளுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.  இன்னமும் இதற்கான சீசன் துவங்காத நிலையில் முதல்ரத எலுமிச்சை ஒன்றுக்கு ரூ.7 வரை விலை வழங்கப்படுகிறது.  காயின் தரத்தைப் பொறுத்து விலை மாறுபடுகிறது.  1000 காய் கொண்ட சிப்பன் ஒன்றுக்கு தற்போது கட்டுப்படியாகும் விலை வழங்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மக்களால் அதிகம் பருகப்படும் காபியின் மூலப்பொருளான காப்பிக்கு விலை மிகவும் குறைந்துள்ளது.  காபிச்செடியை பயிர் செய்து அதற்கு மருந்துகள், பூச்சிக்கொல்லிகள் அடித்து பழமான பின்பு பறித்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.  முன்னதாக பறிக்கப்பட்ட பழங்கள் இயந்திரத்தில் அரைத்து தோல் உரிக்கப்பட்டு, கழுவி, நன்கு காயவைத்த பின்னரே விற்பனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.  இது குறித்து கோம்பைப்பட்டியில் காபி தோட்டம் வைத்துள்ள ஆயக்குடியை காபிதோட்ட உரிமையாளர் சுலைமான் தெரிவித்ததாவது, காபி பயிர் செய்வதற்கு அரசு சார்பில் மானியங்கள் வழங்கப்படுகிறது.  ஆனால் அது மிக குறைந்த அளவாக உள்ளது. 

தற்போது உரம், பூச்சிமருந்து விற்கும் நிலையில் அதை அரசு அதிகரித்து வழங்க வேண்டும். இப்பகுதியில் செலக்சன், ரோபஸ்டா போன்ற ரகமே அதிகம் பயிர் செய்யப்பட்டுள்ளது.  பண்ணைக்காட்டில் உள்ள காப்பி வாரியம் தற்போது காப்பி கொள்முதல் செய்யாததால் தனியாரிடம் விற்கவேண்டி உள்ளது. குறைந்தபட்சமாக  காபிக்கொட்டை கிலோ ரூ.150க்கு விற்கப்பட வேண்டிய நிலைக்கு நாங்கள் உள்ளோம்.  

கடந்த இரண்டு ஆண்டுகளாக சாகுபடி செய்ய முடியாத நிலையில் தற்போதுதான் சாகுபடியை துவங்கியுள்ளோம். இது கட்டுப்படியாகாத விலையாகும் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.