புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

உலகிலேயே இந்தியாவில்தான் யானைகள் அதிகம்!

உலகிலேயே இந்தியாவில்தான் யானைகள் அதிகமென்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் சுமார் 32 ஆயிரம் யானைகள்

News image
Updated On :12 ஆகஸ்ட் 2015, 10:28 pm

உலகிலேயே இந்தியாவில்தான் யானைகள் அதிகமென்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் சுமார் 32 ஆயிரம் யானைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 2012 ஆம் ஆண்டு முதல் மக்களிடையே யானைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி "உலக யானைகள் தினம்' கொண்டாடப்படுகிறது. ஆதிகாலம் முதல் 24 வகை யானை இனங்கள் உலகளவில் காணப்பட்டன. ஆனால், இப்போது 22 வகை யானை இனங்கள் அழிந்துவிட்டன. ஆப்பிரிக்க மற்றும் ஆசிய இன யானைகள் மட்டுமே உள்ளன.
 ஆசிய யானைகள் எண்ணிக்கையில் 56 ஆயிரம் வரை இருக்கலாம் என உலக வனவிலங்கு நிதியம் கணக்கெடுப்பு கூறுகிறது. இதில் இந்தியாவில் மட்டும் 32,000 யானைகளும் இதில் தமிழகத்தில் 4,015 யானைகளும் இருப்பதாக வனத் துறை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இப்போது யானைகள் அரியவகை விலங்குகள் பட்டியலில் உள்ளன.
 மத்திய அரசு மேற்கொண்ட யானைகள் பாதுகாப்பு முயற்சிகளால் அவற்றின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது என, வன உயிரின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
 குறிவைக்கப்படும் தந்தங்கள்: 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை யானைகள் அதன் தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டு வந்தன. ஆனால், இப்போது யானைகள் வேட்டை தமிழகத்தில் ஓரளவுக்கு குறைந்துள்ளதாக விலங்கியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். யானையின் மேல்வரிசை பற்களின் நீட்சிதான் தந்தம். ஒரு டன் எடையுள்ள பொருளையும், தந்தத்தால் தூக்க முடியும்.
 இதுகுறித்து மாவட்ட வன அதிகாரி (கொடைக்கானல்) வெங்கடேஷ் துரைராஜ் கூறியது:
 யானைக்கு கேட்கும் சக்தி அதிகம். ஆனால், கண் பார்வை குறைவு. மூளையின் அளவு பெரியது என்பதால் யானைக்கு நினைவாற்றல் அதிகம் உண்டு. இந்த நினைவாற்றல் மூலமே யானைகள், பரந்த காட்டில் வழித்தடம் மாறாமல் சென்று திரும்புகின்றன. ஒரு யானை சராசரியாக 60 முதல் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கிறது. யானைக்கு தினசரி 200 முதல் 250 கிலோ உணவு தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு 150 முதல் 200 லிட்டர் தண்ணீர் வரை குடிக்கிறது. மனிதனைப்போல, யானை தினசரி தண்ணீரில் குளிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளது. மேலும் ஆண்டுக்கு யானை 300 கி.மீ. தூரத்துக்குப் பயணித்து மீண்டும் அதன் சொந்த இடத்துக்கே திரும்பும் பழக்கம் கொண்டது.
 யானைகளின் வாழ்விடங்களில் ஏற்படும் நாகரிக வளர்ச்சிப் பணிகள், காடுகளில் வெட்டப்படும் மரங்கள், அதிகரிக்கும் குவாரிகள், வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பு ஆகியவை இப்போது யானையின் அழிவுக்கு முக்கிய காரணங்களாகப் பார்க்கப்படுகிறது என்றார் வெங்கடேஷ் துரைராஜ்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.