கட்டட விபத்துகளில் சிக்கி இறக்கும் வட மாநிலத் தொழிலாளர்கள்: கேள்விக்குறியாகும் பாதுகாப்பு

தமிழகத்துக்கு வந்து கட்டுமானம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் வட மாநிலத் தொழிலாளர்கள் உரிய பாதுகாப்பின்றி தங்குவதால் \
கட்டட விபத்துகளில் சிக்கி இறக்கும் வட மாநிலத் தொழிலாளர்கள்: கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
Updated on
2 min read

தமிழகத்துக்கு வந்து கட்டுமானம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் வட மாநிலத் தொழிலாளர்கள் உரிய பாதுகாப்பின்றி தங்குவதால் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களுக்கு உரிய பாதுகாப்பான தங்குமிடம் அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
 ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், ஒடிஸா, பிகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைகள், உணவகங்கள், செங்கல் சூளைகள், கட்டடங்கள் கட்டும் பணிகளுக்கு அழைத்துவரப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் குடும்பத்தினருடன் வந்து கட்டுமானப் பணிகளில் தான் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
 அதிக வேலை,
 குறைந்த ஊதியம்:
 பிகார், ஒடிஸா உள்ளிட்ட வடமாநிலங்களில் ஆண்களுக்கு ரூ.150-இல் இருந்து ரூ.220 வரையும், பெண்களுக்கு ரூ.100-இல் இருந்து ரூ.180 வரை தான் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய விலைவாசியில் மேற்கண்ட சம்பளம் அவர்களுக்கு போதுமானதாக இல்லை. அதே நேரத்தில் தமிழகத்தில் கட்டடப் பணிக்கு ஆண்களுக்கு ரூ.450-இல் இருந்து ரூ.600 வரையும், பெண்களுக்கு ரூ.350-இல் இருந்து ரூ.500வரையும் வழங்கப்படுகிறது. இதனால் கட்டடப் பணிக்கு தொழிலாளர்கள் தமிழகம் வருகின்றனர்.
 தமிழகத்தில் பணிபுரிந்து வரும் வட மாநிலத் தொழிலாளர்கள் யாரும் நேரடியாக இங்கு வருவதில்லை. இதற்கென இடைத்தரகர்கள் உள்ளனர்.
 அவர்கள் தொழிலாளர்களை கட்டுமானப் பணி செய்யும் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைத்து விடுவர். அதே நேரத்தில் அவர்கள் தங்க பாதுகாப்பான இடம் அமைத்துக் கொடுப்பது கட்டடப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தின் பொறுப்பாகும்.
 ஆனால் தமிழகத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் ஏதும் வட மாநிலத் தொழிலாளர்கள் தங்க பாதுகாப்பான இடம் அளிப்பதில்லை. புதிதாக கட்டடப் பணிகளை மேற்கொள்ளும் இடம் அருகிலோ, அதன் அடித்தளத்திலோ தான் பாதுகாப்பற்ற நிலையில் இவர்கள் தங்க வைக்கப்படுகின்றனர். இதனால் அப்பாவித் தொழிலாளர்கள் கட்டட விபத்தில் சிக்கி இறக்கின்றனர். உதாரணமாக திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சின்னபுலியூர் கிராமத்தில் தனியார் தொழிற்சாலை கட்டும் பணியில் ஒடிஸா, பிகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த வட மாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்தனர்.
 இவர்கள் தங்குவதற்கு பாதுகாப்பான இடம் அமைத்துத் தரப்படாததால் அவர்கள் தொழிற்சாலையின் சுற்றுச்சுவர் அருகே தங்கி பணிபுரிந்தனர்.
 2013-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அந்தப் பகுதியில் பெய்த மழை காரணமாக சுவர் இடித்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே இறந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து சென்னை
 மௌலிவாக்கத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் 61 பேர் இறந்தனர். இவர்களில் 35 பேர் ஆந்திர மாநிலத்தையும், 7 பேர் ஒடிஸா மாநிலத்தையும் சேர்ந்தவர்கள். அதேபோல் பொன்னேரி வட்டம், சோழவரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட உப்புரபாளையம் பகுதியில் தனியார் கிடங்கு கட்டும் பணியில் 50-க்கும் மேற்பட்ட ஆந்திர மாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.
 இவர்கள் தங்குவதற்கு பாதுகாப்பான இட வசதி செய்து தரப்படாததால் அவர்கள் அனைவரும் அங்குள்ள 20 அடி உயரமுள்ள சுற்றுச்சுவர் அருகில் தங்கி பணிபுரிந்தனர். அப்போது பெய்த மழை காரணமாக அந்த சுவர் இடிந்து விழுந்ததில் 11 பேர் இறந்தனர்.
 மேலும் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி வட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் ஆபத்தான பணிகளில் வட மாநிலத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதில் பலர் அவ்வப்போது இயந்திரத்தில் சிக்கியும், உயரமான இடத்திலிருந்து விழுந்து இறக்கும் சம்பவங்களும் நடைபெறுகிறது.
 இதைத் தடுக்கும் வகையில் தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளர்கள் உரிய பாதுகாப்புடன் பணிபுரிகின்றனரா, அவர்கள் தங்கி பணிபுரிய பாதுகாப்பான இடவசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளதா என அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என்பதே சமூக நல ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com