நெய்வேலி நிறுவன தொழிலாளர் பிரச்னையில் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக தலையிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றிவரும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்து 5 ஆண்டுகளுக்கொரு முறை நடைபெற வேண்டிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் 2011ஆம் ஆண்டிலிருந்து இழுபறியாக உள்ளது. 25 விழுக்காடு ஊதிய உயர்வு வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், 2000க்கும் மேற்பட்டோருக்கு வாரிசு அடிப்படையில் வேலைகள் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளன. அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். தொழிலாளர்களின் ஞாயமான இந்தக் கோரிக்கைளைப் பொருட்படுத்தாமல், பேச்சுவார்த்தை என்னும் பெயரால் நிர்வாகம் காலம் கடத்தி வருகிறது. 10 விழுக்காட்டிற்கு மேல் ஊதிய உயர்வு வழங்க இயலாது எனப் பிடிவாதம் செய்து வருகிறது.
இதனை வெறுமனே தொழிலாளர்களின் பிரச்சனையாக மட்டும் பார்க்காமல், பரந்துபட்ட தமிழக மக்களின் பிரச்சனையாகக் கருதி தமிழக அரசும், மத்திய அரசும் அணுக வேண்டும். நேரடியாக, பிரதமர் நரேந்திரமோடி இந்தப் பிரச்சனையில் தலையிட வேண்டும்.
நெய்வேலி தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட மைய, மாநில அரசுகள் ஆவன செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து அலட்சியப்படுத்தும் நிலை நீடிக்குமேயானால் விடுதலைச் சிறுத்தைகளும் தொழிலாளர்களோடு இணைந்து அறப்போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.