திருநெல்வேலியில் இன்று பட்டப்பகலில் மர்ம நபர்கள் பெண்ணை வெட்டிக் கொலை செய்தனர்.
திருநெல்வேலி நகரம் அம்மன் சன்னதி தெருவை சேர்ந்தவர் கணேசன் மனைவி தாயம்மாள் (53). இவரது கணவர் இறந்து விட்டார். கூலி வேலை செய்து மகன், மகளுடன் வசித்து வந்தார். இன்று பிற்பகலில் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாராம். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தாயம்மாளை
அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி விட்டனர். தகவலறிந்த போலீஸார் சமப்வ இடத்திற்கு சென்று தாயம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர்.
தாயம்மாள் 10 ஆண்டுகளுக்கு முன்பு, அப்பகுதியை சேர்ந்த பிரமுகரிடம் வீட்டு பத்திரத்தை வைத்து ரூ. 50 ஆயிரம் கடன் வாங்கியிருந்தாராம். கடன் தொகைக்கு பதிலாக பணம் கொடுத்தவர் வீட்டை எழுதி தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன், பணத்தை கொடுத்து தாயம்மாள் வீட்டு பத்திரத்தை மீட்டு விட்டாராம். அப்பிரமுகர் வீட்டை விலைக்கு தருமாறு தாயம்மாளிடம் கேட்டாராம். தாயம்மாள் மறுத்து விட்டாராம். இதனிடையே இன்று மர்ம நபர்களால் தாயம்மாள்
கொலை செய்யப்பட்டார்.
திருநெல்வேலி நகரம் போலீஸார் வழக்குப் பதிந்து தாயம்மாள் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.