சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை அதிமுகவின் பொது செயலாளராக, அக்கட்சியின் பொதுக்குழு தேர்ந்தெடுக்கக்கூடாது என்று கோரி அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதிமுக பொது செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கடந்த 5-அம தேதி அன்று மறைந்தார். அதனைத் தொடர்ந்து அவரது நெருங்கிய தோழி சசிகலா நடராஜனை அதிமுகவின் பொது செயலாளராக பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சசிகலாவை அதிமுகவின் பொது செயலாளராக அக்கட்சியின் பொதுக்குழு தேர்தெடுக்கக்கூடாது என்று கோரி அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சசிகலா புஷ்பா சார்பாக மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அதிமுக கட்சியின் சட்ட விதிகள் சசிகலா பொதுச்செயலாளராக பங்கேற்பதை அனுமதிக்காது. ஆனால் தேர்தல் ஆணைய நடைமுறைகளின் படி, இவ்வாண்டு இறுதிக்குள் கூட்டப்பட உள்ள அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவை அதிமுகவின் பொது செயலாளராக தேர்தெடுக்க உள்ளதாக முன்னாள் அமைச்சரான, அதிமுக செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். எனவே சசிகலாவை அதிமுகவின் பொது செயலாளராக, அக்கட்சியின் பொதுக்குழு தேர்தெடுக்க தடை விதிக்க வேண்டும், இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தையும் ஒருமனுதாரரான சேர்க்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளதால் இன்று பிற்பகல் நீதிபதி கல்யாணராமன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.