நாகர்கோவில்: திரையரங்க உரிமையாளர் ஒருவரிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாத தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணுவை கைது செய்ய நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகர்கோவிலைச் சேர்ந்தவர் திரையரங்க உரிமையாளர் டேவிட். இவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் தம்மிடம் வாங்கிய ரூ2 லட்சம் கடனை தாணு திருப்பித் தரவில்லை என்று வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம் டேவிட்டிடம் கடனாக வாங்கிய பணத்தை திருப்பித் தர தாணுவுக்கு உத்தரவிட்டது. ஆனால் அதற்குப் பின்பும் டேவிட்டுக்கு தாணு பணத்தைத் தரவில்லை. இது குறித்து நாகர்கோவில் நீதிமன்றத்தில் டேவிட் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து வரும் 28-ந் தேதிக்குள் தாணுவை கைது செய்யுமாறு காவல்துறைக்கு நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.