தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வில் ‘வெயிட்டேஜ்' முறை செல்லுமா? உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு !

தமிழகத்தில் நடைபெறும்  ஆசிரியர் தகுதித் தேர்வில் ‘வெயிட்டேஜ் முறை பயன்படுத்தப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவு செல்லுமா என்பது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.
தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வில் ‘வெயிட்டேஜ்' முறை செல்லுமா? உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு !

புதுதில்லி: தமிழகத்தில் நடைபெறும்  ஆசிரியர் தகுதித் தேர்வில் ‘வெயிட்டேஜ் முறை பயன்படுத்தப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவு செல்லுமா என்பது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.

தமிழகத்தில் நடைபெறும்  ஆசிரியர் தகுதித் தேர்வில், அனைத்து வகையான இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு அளிக்க தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 25 வழி செய்கிறது. அதேபோல் அரசாணை எண்  71-ன் படி 'வெயிட்டேஜ்’ முறையும் ஆசிரியர் பணிநியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தகுதி தேர்வில் மதிப்பெண் விலக்கு என்பது எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு மட்டுமே வழங்க முடியும் என்று விதிகள் இருக்கும் நிலையில், அனைவருக்கும் மதிப்பெண் விலக்கு வழங்குவது சரியல்ல என்றும், 'வெயிட்டேஜ்' முறை பின்பற்றப்பட்டால் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாக ஆசிரியர் படிப்பை முடித்தவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என கூறி, சென்னை ஐகோர்ட்டிலும், அதன் மதுரை கிளையிலும் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசின் அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது சரி என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஆனால் இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழக அரசின் முடிவு தேர்வு எழுதுபவர்களுக்கு பாதகமாக இருப்பதாக கூறி, எனவே அரசாணைக்கு தடை விதிப்பதாகவும் உத்தரவு பிறப்பித்தது.

இதனால் ஒரே வழக்கில் சென்னை ஐகோர்ட்டு, அதன் மதுரை கிளை ஆகிய இரு வேறு அமர்வுகளின் கருத்து வேறுபாடு குழப்பத்தை தருவதாகவும், உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு அனைத்து பிரிவினருக்கும் 5 சதவீத மதிப்பெண் விலக்கு மற்றும் ‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி இந்த தேர்வில் கலந்து கொண்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவானத்து நீதிபதிகள் சிவகீர்த்தி சிங், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த அக்டோபர் 25-ம் தேதி விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

தற்போது இன்று மாலை இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம்   அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com