தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கூடுதல் லாபம் தரும் பயறு வகைப் பயிர்கள்!

தமிழகத்தில் நிகழ் சம்பா பருவத்தில் வரப்பு பயிராக பயறு வகைகளை சாகுபடி செய்தால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று வேளாண் துறையினர்

News image
Updated On :20 அக்டோபர் 2016, 7:25 am

DIN

தமிழகத்தில் நிகழ் சம்பா பருவத்தில் வரப்பு பயிராக பயறு வகைகளை சாகுபடி செய்தால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
நிகழாண்டு (2016) உலக பயறு வகை ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயறு வகை பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
நமது நாடு அரிசி, கோதுமை, கரும்பு போன்ற முக்கிய பயிர்களின் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தாலும், பயறுவகை பயிர்களில் உற்பத்தியில் தன்னிறைவு அடையப்படாததால், பயறுவகை பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க தமிழகத்தில் வேளாண்மைத் துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
நெல் வரப்புகளில் பயறுவகை சாகுபடி: விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கார்த்திகை பட்டத்தில் பயறுவகை பயிர்களை விவசாயிகள் பெருமளவு சாகுபடி செய்கின்றனர்.
வழக்கமாக முழு வயல்களிலும் பயிரிடுவதைத் தொடர்ந்து, தற்போது நிகழாண்டு சம்பா சாகுபடி நெல் வயல்களில் வரப்பு பயிராக உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயிர்களை சாகுபடி செய்திடும் தொழில்நுட்பத்தை வேளாண்த் துறை அறிமுகப்படுத்தி வருகிறது.
நடவுமுறை: சம்பா நெல் நடவுப் பணி முடிந்த உடன் வரப்பைச் சுற்றி உள்புறம் சேற்றை அணைத்து, அரை அடி உயரத்துக்கு உள்வரப்பு அமைக்கப்பட வேண்டும். அதில் ஓர் அடி இடைவெளிவிட்டு குழிக்கு 2-3 பயறு விதைகள் ஊன்றப்படுகிறது. பயறுவகை விதைகள் மண்ணின் உரத்தை உறிஞ்சி முளைத்து நன்கு செழித்து வளர்ந்துவிடும்.
பூச்சிகளையும் கட்டுப்படுத்தும்: பயறுவகை பயிர்களில் பொறி வண்டுகள் அதிகம் இனவிருத்தி அடைந்து, நெல் பயிரைத் தாக்கும் இலைச் சுருட்டு புழு, புகையான், இலைப்பேன், குருத்துப்பூச்சி போன்ற தீமை தரும் பூச்சிகளின் முட்டைகள், புழுக்களை அழிப்பதால் விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பும் கிடைப்பதுடன், மருந்து தெளித்திடாத இயற்கை விவசாயத்துக்கு வரப்பு பயிர்கள் பெரிதும் உதவியாக உள்ளது.
உளுந்துப் பயறு மகசூல்: இதனால், பயிர் பாதுகாப்பு மருந்துகள் தெளிக்காமல் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.2,000 செலவு குறைந்திடும். மேலும், பயறுவகை பயிர்கள் வரப்பு பயிர்களில் இருந்து ஏக்கருக்கு குறைந்தது 100 முதல் 200 கிலோ வரை உளுந்து மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது.
நிகழ் சம்பா பருவத்தில் சாகுபடி: விவசாயிகளுக்கு இன்றைய சந்தை மதிப்பில் ஏக்கருக்கு ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
இதனால், விவசாயிகள் நிகழ் சம்பா சாகுபடியில் வரப்பு பயிராக, உளுந்து உள்ளிட்ட பயறுவகைகளை கூடுதலாக சாகுபடி செய்து, பூச்சிமருந்து செலவைக் குறைப்பதுடன், குறைந்த செலவில் கூடுதல் வருவாய் பெறவும் பயறுவகைகளைப் பயிரிட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று, விழுப்புரம் வேளாண்மை உதவி இயக்குநர் கென்னடி ஜெபக்குமார் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.