மதுரை: உத்தரப்பிரதேச வெற்றியை மட்டும் வைத்து பாஜகவின் எதிர்காலத்தை தீர்மானிக்கமுடியாது என்று புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி கூறினார்.
மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை சாமி தரிசனம் முடித்த பின் அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
புதுசேரியின் பாதுகாப்பு, நிர்வாகத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே முடிவுசெய்யும் அதிகாரம் இந்திய அரசமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ளது. ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோருக்கு தனித்தனி அதிகாரமும் வரையறுக்கப்பட்டுள்ளன. ஆகவே அதிகாரத்தை மீறாமல் அனைவரும் செயல்படுவது நல்லது.
மாநில அரசுகள் விவசாயக் கடன்களை ரத்து செய்த நிலையில், மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். புதுதில்லியில் போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகளை பிரதமர் சந்தித்துப் பேசவேண்டும்.
உத்தரப்பிரதேச வெற்றியை மட்டும் வைத்து பாஜகவின் எதிர்காலத்தை தீர்மானிக்கமுடியாது. பல மாநில இடைத் தேர்தல்களில் காங்கிரஸும் வெற்றிபெற்றுள்ளது. ராகுல்காந்தி காங்கிரஸின் தலைவராக வேண்டும் என்பதே கட்சியினரின் விருப்பம்.
தமிழகத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டம் எதிர்கால கூட்டணிக்கான அடித்தளமா? என்பதை அவர்தான் விளக்கவேண்டும்.
மத்திய பாஜக அரசு மதம் சார்ந்து செயல்படுகிறது. காங்கிரஸ், இடதுசாரிகள் அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் கொள்கை உடையன. ஆகவே, தமிழகத்தில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற கட்சிகளின் மெகா கூட்டணி அமைய வாய்ப்புண்டு என்றார்.