சென்னை: கரூர் மருத்துவக்கல்லூரியை இடம் மாற்ற உத்தரவிட்டதே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் என்று கரூர் எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு தமிழக போக்குவரத்து துறை அமைசச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கமளித்துள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், கரூர் மாவட்டம் வாங்கல் குப்புச்சி பாளையத்தில் கரூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். மேலும், 229.46 கோடி ரூபாய் மருத்துவமனை கட்டுமானப் பணிக்காக ஒதுக்கப்பட்டது.
ஆனால் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கும் கட்டிட பணிகளை துவக்கவிடாமல் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தடுத்து வேறு இடத்துக்கு மாற்ற முயற்சிப்பதாக கரூர் நகர காவல் ஆய்வாளருக்கு புகார் மனு ஒன்றை செந்தில் பாலாஜி அனுப்பியுள்ளார்.
மேலும் அந்த புகார் மனுவில், இரண்டு பேரையும் கண்டித்து வரும் வரும் திங்கள்கிழமை (ஏப்.24) காலை 9 மணிக்கு கரூர் தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டுள்ளார்
இந்நிலையில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று மாலை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
வேறு பல சிக்கல்கள் காரணமாக கரூர் மாவட்டம் வாங்கல் குப்புச்சி பாளையத்தில் கட்டப்படவிருந்த கரூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை இடம் மாற்ற முதல்வர் ஜெயலலலிதா உயிரோடு இருந்த காலத்திலேயே உத்தரவிடப்பட்டுள்ளது. இது செந்தில்பாலாஜிக்கும் தெரியும்.
அப்பொழுதெல்லாம் அமைதியாகி இருந்த செந்தில்பாலாஜி இப்பொழுது போராட்டம் நடத்த இருப்பதாக குறிப்பிடுவது சரியா என்று தெரியவில்லை. அவர் அப்பொழுது இதைப்பற்றி கேட்டிருக்கலாம்.
இவ்வாறு எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.