சென்னை: அதிமுக இரு அணிகள் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்றால் ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை மற்றும் அதிமுகவிலிருந்து சசிகலா குடும்பம் நீக்கம் ஆகிய இரண்டு விஷயங்கள் கண்டிப்பாக நடைபெற வேண்டும் என்று பன்னீர்செல்வம் அணியின் கே.பி.முனுசாமி தெரிவித்திருப்பதால் பேச்சுவார்த்தையில் சிக்கல் எழுந்துள்ளது.
அதிமுகவின் இரு அணிகள் ஒன்றிணைவதுதொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட இரண்டு தரப்பிலும் குழுக்கள் அறிவிக்கப்பட்டு இன்று பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று கூறப்பட்ட வேளையில், அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் கே.பி.முனுசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறியதாவது:
எங்கள் அணியின் தலைவரான பன்னீர்செல்வம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை மற்றும் அதிமுகவிலிருந்து சசிகலா குடும்பம் முழுமையாக நீக்கம் ஆகிய இரண்டு விஷயங்களைத்தான் பேச்சுவார்தைக்கு முன்பு செய்ய வேண்டிய விஷயங்களாக முன்வைத்தார்.
எனவே முன்பே கூறியபடி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு மத்திய அரசுக்கு மாநில அரசு கோரிக்கை வைக்க வேண்டும். அதேபோல் அதிமுகவிலிருந்து சசிகலா குடும்பம் முழுமையாக நீக்கம் செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியாக வேண்டும்.
ஆனால் இப்பொழுதும் கட்சிப்பத்திரிகையில் சசிகலாவுக்கு ஆதரவாக செய்திகள் வருவது, பேச்சுவார்த்தை குழுவினரை வேறு யாரோ இயக்குவது போன்ற தோற்றம் உருவாகிறது.
பேச்சுவார்த்தைக்கு குழுக்கள் அமைக்கப்பட்ட பின்னரும் அங்கிருக்கும் சிலர் கட்டுப்பாடு இல்லாமல் தொடர்பற்ற தகவல்களை பேசி வருகின்றனர். அவர்களுக்கு கண்டிப்பாக கட்டுப்பாடு தேவை. மேற்குறிப்பிட்ட இரண்டு விஷயங்ககள் தவிர பேச்சுவார்தைக்கு எந்த நிபந்தனைகளும் இல்லை.
இவ்வாறு கே.பி.முனுசாமி தெரிவித்தார்.