ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜரின் 1,000-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு லிப்கோ சாரிட்டீஸ் டிரஸ்ட் சார்பில் "அற்புத ராமானுஜர்' என்ற தலைப்பில் ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் சொற்பொழிவுகள் நடைபெற்றது.
இதில் கலந்துகொள்ள வந்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"நீட்' தேர்வுக்கு தமிழகத்தில் உள்ள கட்சிகள் ஆதரவு தெரிவிக்காதது அவமானம். "நீட்' தேர்வு தொடர்பாக இறுதி முடிவை குடியரசு தலைவர் தான் எடுக்க வேண்டும். தமிழகத்தில் "நீட்' தேர்வுக்கு பயிற்சி அளித்தால் மாணவர்களின் திறமைகள் மேம்படும் என பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் கூறியுள்ளார்.
மேலும், மாவோயிஸ்ட் தாக்குதலில் பலியான வீரர் ஒருவரின் தாய், தனது அடுத்த மகனையும் போர்க்களத்துக்கு அனுப்புவேன் என்று கூறியது தேச பக்தியை அதிகரிக்கச் செய்கிறது. மீனவர்கள் மீது எக்காரணத்தைக் கொண்டும் தாக்குதல் நடத்தக் கூடாது என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளது இந்திய - இலங்கை நட்புறவை பலப்படுத்தியுள்ளது.
அதிமுக இரண்டாக பிளவுபட்டு இணைய உள்ளதன் பின்னணியில் பாஜக உள்ளதாக வதந்தி பரப்பப்படுகிறது. இது பாஜகவுக்கு இலவச விளம்பரத்தை கேட்காமலே அளிப்பது போன்று உள்ளது என்றார் இல.கணேசன்.