ஓ. பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி என்பது யூகமே என்று கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக துணைப் பொது செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டது சட்டவிரோதம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுசூதனன், கே.பி. முனுசாமி, நந்தம் விஸ்வநாதன், செம்மலை, பாண்டியராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி. முனுசாமி, கட்சியின் வளர்ச்சி பணிகள், தமிழக பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஜெயலலிதா மரணத்துக்கு விசாரணை, சசிகலா, டிடிவியை கட்சியிலிருந்து நீக்கினால் பேச்சு எனக் கூறியிருந்தோம். தினகரனை மட்டுமின்றி சசிகலா குடும்பத்தையே கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி தற்போதுதான் விழித்துள்ளது.
அணிகள் இணைப்புக்காக மறைமுக பேச்சுவார்த்தை நடப்பதாக அமைச்சர்கள் மட்டுமே கூறுகின்றனர். ஓ. பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்பது யூகமே. இவ்வாறு அவர் தெரிவித்தார்.