மின்னணு குடும்ப அட்டைகளில் தவறான விவரங்களை சிறப்பு முகாம்கள் அமைத்து திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் 1 கோடியே 95 லட்சத்து 26 ஆயிரத்து 145 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில், 6 கோடியே 85 லட்சத்து 78 ஆயிரத்து 735 உறுப்பினர்கள் உள்ளனர். இக்குடும்ப அட்டைகளுக்கு மொத்தம் 33,222 நியாய விலைக்கடைகள் மூலம் உணவுப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தகுதியானோருக்கு உணவுப் பொருள்கள் கிடைக்கச் செய்யும் வகையில், தற்போது பயன்பாட்டில் இருந்து வரும் பழைய குடும்ப அட்டைகளுக்கு பதிலாக, நவீன மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.
இதில் பெரும்பாலான மின்னணு குடும்ப அட்டைகளில் தலைவர் பெயர், புகைப்படம், முகவரி ஆகியவை தவறாக உள்ளன. இதற்காக ஒவ்வொரு மாவட்ட அளவிலும் வட்ட வழங்கல் அலுவலகத்துக்கும், மாநகராட்சி அளவில் நுகர்வோர் பாதுகாப்பு உணவு வழங்கல் துறை உதவி ஆணையாளர் அலுவலகத்துக்கும் திருத்தம் செய்வதற்கு பொதுமக்கள் செல்ல வேண்டியுள்ளது.
இதைத் தவிர்க்கும் நோக்கத்தில் 3 நியாய விலைக்கடைகளைச் சேர்ந்த பொதுமக்களுக்குக் குறிப்பிட்ட இடத்தில் வார இறுதி நாள்களில் சிறப்பு முகாம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து அந்தந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் தகவல் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்துள்ளதாக நியாய விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.