சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது நண்பரை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டுத் தவறுதலாக தனது ஆடி காருக்கு பதிலாக அங்கு நின்றுகொண்டிருந்த ஆம்புலன்ஸை வீட்டிற்கு ஓட்டிச் சென்றுள்ளார்.
சென்னை பாலவாக்கம் பகுதியில் வசிக்கும் 30-வயதான மித்தில் கடந்த டிசம்பர் 17, இரவு 1.30 மணியளவில் நுங்கம்பாக்கம் அருகில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் காரில் வந்து தனது நண்பரை அனுமதித்து விட்டு மீண்டும் வீடு திரும்பும் போது ஆடி காருக்கு பதிலாக மாருதி அம்னி ஆம்புலன்ஸில் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அடுத்த நாள் காலை வீட்டில் உள்ளவர்கள் கார் எங்கே எனக் கேட்ட போதுதான் மிதில் இதைக் கவனித்துள்ளார். இன்னிலையில் காலை 3 மணியளவில் ஆம்புலஸ் ஒன்று காணாமல் போயிருப்பதைக் கவனித்த மருத்துவமனை நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு மித்திலின் கார் ஓட்டுநர் அந்த ஆம்புலன்ஸை ஓட்டிக் கொண்டுவந்து மருத்துவமனையில் நிறுத்திவிட்டு தனது முதலாளி தவறுதலாக இதை ஓட்டி வந்து விட்டதாகக் கூறியுள்ளார்.
ஆம்புலன்ஸின் ஒரு பக்க கண்ணாடி உடைந்திருப்பதைப் பற்றி மருத்துவமனையில் கேட்ட போது, அதைத் தான் சரி செய்து தருவதாக மித்தில் உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர் மீது எந்தவொரு வழக்கையும் மருத்துவமனை நிர்வாகம் கொடுக்கவில்லை. ஆனால் இந்தச் சம்பவம் எப்படி நடந்தது என்று காவல் துறை நடத்திய விசாரணையில் அன்று இரவு மித்தில் குடி போதையில் இருந்தது தெரியவந்தது.
குடி போதையில் காரை ஓட்டிச் சென்றால் காவலர்களிடம் பிடிபடுவோம் என்று யோசித்துத் தான் மித்தில் தெளிவாக ஆம்புலன்ஸில் பத்திரமாக வீட்டை அடைந்துள்ளார் எனவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.