திருச்சியில், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாய நகைக்கடன் கணக்கில் ரூ. 40.46 லட்சம் மோசடி செய்ததாக வங்கிச் செயலாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 11 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், எட்டரை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் கடந்த 2013-16 இடைப்பட்ட நிதியாண்டுகளில், அப்பகுதியைச் சேர்ந்த 42 பேர், மொத்தம் ரூ. 40,46,361-க்கு நகை அடமானத்தின் பேரில் வேளாண் கடன் பெற்றிருந்தனர்.
பின்னர், கடன் பெற்றவர்கள் கடன் தொகையைச் செலுத்தி நகைகளை மீட்டுள்ளனர். ஆனால், வங்கிக் கணக்குகளை தணிக்கை (ஆடிட்) செய்தபோது, கடன் தொகை செலுத்தப்படவில்லை என பதிவாகியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ரூ. 40,46,361-ஐ, அப்போதைய வங்கிச் செயலாளர் முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்ட 13 பேர் சேர்ந்து மோசடி செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாக வங்கி துணைப்பதிவாளர் பாலசந்திரன், திருச்சி வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில், ஆய்வாளர் உமா, போலீஸார் 13 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையைத் தொடர்ந்து வங்கிச் செயலாளர் குளித்தலையைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (52), கூட்டுறவுத்துறை நியாயவிலைக் கடையில் பணியாற்றும் ரஞ்சன் (45) ஆகிய இருவரையும் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். வங்கி உறுப்பினர்கள் 11 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.