சென்னை: தமிழக சட்டசபையில் நேற்றைய நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வரும் புதன்கிழமையன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்காக நேற்று கூடிய சட்டசபை கூட்டத்தில் கடும் ரகளை ஏற்பட்டது. இருக்கை கிழிப்பு, மைக் உடைப்பு சம்பவங்கள் அரங்கேறியதால் சபை மதியம் ஒரு மணி வரைக்கும் ஒத்தி வைக்கபட்டது.பின்னர் மீண்டும் கூடிய பொழுதும் அசாதாரண சூழ்நிலை நிலவியதால் மீண்டும் சபை மூன்று மணி வரைக்கும் ஒத்திவைக்கபப்ட்டது. சபாநாயகரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து சட்டசபை வளாகத்தில் தரையிலமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டார். பின்னர் உடனடியாக ஆளுநர் வித்யாசாகரராவிடம் ஸ்டாலின் இது தொடர்பாக புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து மெரினா காந்தி சிலை அருகே தர்ணாவில் ஈடுபட ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் அடுத்ததாக என்ன நடவடிக்கை மேற்கொள்வது என்பதை முடிவு செய்வதற்காக அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
கூட்டத்தின் முடிவில் திமுக தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தமிழக சட்டமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஜனநாயக வீரோத சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 22-அம தேதி புதன்கிழமை அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்.
காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.