கோவை: தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றால் தமிழக அரசை கலைக்க வேண்டும் என்று கூறுவதற்கு பீட்டா அமைப்புக்கு தகுதியில்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
'பீட்டா ' உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கின் காரணமாக தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை.
ஆனால் இம்முறை தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற தடையை மீறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தால் தமிழக அரசை கலைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு பீட்டா அமைப்பு சமீபத்தில் கடிதம் எழுதியுள்ளது.
இந்த நிலையில் தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழு அவர்,'இந்தியாவில் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசை கலைக்க வேண்டும் என்று கோருவதற்கு பீட்டா அமைப்புக்கு எந்த தகுதியம் இல்லை என்று ஆவேசமாக கூறினார்.