சீனாவுடனான எல்லைப் பிரச்னைக்கும் மலபார் கூட்டுப்பயிற்சிக்கும் தொடர்பில்லை: கடற்படை அதிகாரிகள்
சீனாவுடனான எல்லைப்பிரச்னைக்கும் மலபார் கூட்டுப்பயிற்சிக்கும் தொடர்பில்லை என இந்திய, அமெரிக்க, ஜப்பான் கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.


சீனாவுடனான எல்லைப்பிரச்னைக்கும் மலபார் கூட்டுப்பயிற்சிக்கும் தொடர்பில்லை என இந்திய, அமெரிக்க, ஜப்பான் கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய 3 நாடுகள் இணைந்து 'மலபார்' கூட்டு கப்பல் போர் பயிற்சியை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் நடத்தி வருகின்றன.
இந்தாண்டு இந்தப் பயிற்சி கடந்த ஜூலை 7- ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சி அருகே அரபிக்கடல் பகுதியில் தொடங்கி வைக்கப்பட்டது. இது 2 கட்டமாக வரும் 17ஆம் தேதி வரை நடக்கிறது. அந்த வகையில் சென்னைக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் கூட்டு போர் பயிற்சி திங்கள்கிழமை (ஜூலை 10) தொடங்கியது.
சென்னையில் 3 நாள்கள் நடக்கும் இந்தப் பயிற்சியில் இந்தோ- ஆசிய பசிபிக் கடற்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக 3 நாட்டு கடற்படை வீரர்களும் தொழில்நுட்ப ரீதியிலான கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவுள்ளனர்.
இந்தக் கூட்டுப்பயிற்சிக்கான செயல் விளக்கங்கள் குறித்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி சென்னை துறைமுகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் இந்தியக் கடற்படை துணைத் தளபதி ஹெச்.சி.எஸ். பிஷ்ட், ஜப்பான் கடற்படைத் துணைத் தளபதி ஹிரோசி யமாமுரா, அமெரிக்க கடற்படை பாதுகாப்பு அதிகாரி வில்லியம் பர்ம் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டி: கடந்த 1992- இல் முதல் முறையாக இந்திய- அமெரிக்க நாடுகள் பங்கேற்ற கூட்டுப்பயிற்சி சென்னையில் தொடங்கியது. தற்போது 21- ஆவது முறையாக இந்தப் பயிற்சி நடைபெற்று வருகிறது.
என்னென்ன பயிற்சிகள்?: இந்தப் பயிற்சி என்பது எந்த நாட்டுக்கும் எதிராகவும் நடைபெறவில்லை. குறிப்பாக இந்திய,- சீன எல்லையில் தற்போது இருந்து வரும் பதற்றான சூல்நிலைக்கும், மலபார் பயிற்சிக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. அதே நேரத்தில் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளின் போர் உத்திகள் அனைத்தையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வோம்.
வரும் ஜூலை 13- ஆம் தேதி வரை சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களில் மூன்று நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள், வீரர்களுக்கு தொடர் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
22 போர்க்கப்பல்கள்: இந்தப் பயிற்சியில் இந்தியா சார்பில் ஐ.என்.எஸ். விக்கிரமாதித்யா, ஐ.என்.எஸ். ரன்விஜய், ஐ.என்.எஸ். ஷிவாலிக், ஐ.என்.எஸ். சயாத்திரி, ஐ.என்.எஸ். ஜோதி, ஐ.என்.எஸ். கமோட்டா, ஐ.என்.எஸ். கிர்பான் உள்ளிட்ட கப்பல்கள் ஈடுபடுகின்றன.
இதுதவிர உலகிலேயே மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலான அமெரிக்க கடற் படைக்கு சொந்தமான யு.எஸ்.எஸ்.நிமிட்ஸ் (சி.வி.என்- 68), ஏவுகணைகளை வழிநடத்தும் கப்பல் யு.எஸ்.எஸ். பிரின்ஸ்டன் (சிஜி.59), ஏவுகணைகளை வழிமறித்து அழிக்கும் கப்பல் யு.எஸ்.எஸ். ஹோவர்ட் (டிடிஜி- 83), யு.எஸ்.எஸ். ஷூப் மற்றும் யு.எஸ்.எஸ். கிட் (டிடிஜி 100) மற்றும் பி- 8ஏ போஸிடான் விமானம் தாங்கி கப்பல் மற்றும் விரைவாக செல்லும் லாஸ் ஏஞ்சல்ஸ் நீர்மூழ்கி கப்பல் ஆகியவை பங்கேற்கின்றன.
ஜப்பான் நாட்டு கடற்படையில் உள்ள சுய பாதுகாப்பு படை கப்பலான ஜெ.எஸ்.இஜிமோ (டிடிஎச்- 183). ஜெ.எஸ்.சஜாநமி (டிடி113) உள்ளிட்ட 22 போர்க்கப்பல்கள் இந்த பயிற்சியில் ஈடுபடுகின்றன. கூட்டுப்பயிற்சி முடிவடைந்த பின்னர் 13- ஆம் தேதி போர்க்கப்பல்கள் அந்தந்த நாடுகளுக்குப் புறப்பட்டுச் செல்லும் என அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...