சென்னை: தமிழகத்தில் தற்பொழுது குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் அவசியம் இல்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், மாநிலங்களை எம்.பியுமான இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்திற்கு செல்வதற்காக இன்று காலை அங்கு வந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவிற்கு, உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக போயஸ் கார்டன் இல்லத்திற்கு வெளியே தீபா ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் செய்தி சேகரிக்க உள்ளே செல்ல செய்தியாளர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டதால் செய்தியாளர்கள் தரப்பிலும் போராட்டம் நடத்தப்பட்டது. ஆங்கில செய்தி சேனல் ஒன்றின் செய்தியாளரும் கடுமையாக அங்கிருந்த பாதுகாவலர்களால் தாக்கப்பட்டுள்ளார், அத்தோடு கேமரா, மைக் போன்ற உபகரணங்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் நிலவும் ஆட்சி சரியில்லை என்றும், அதனைக் கலைக்க வேண்டுமென்றும் செய்தியாளர்களிடம் அப்பொழுது தீபா தெரிவித்தார். இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், மாநிலங்களைவ எம்.பியுமான இல.கணேசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது.
தமிழகத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் அவசியம் இல்லை. குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது அத்தனை எளிதும் இல்லை. அதிமுகவில் தற்பொழுது நிலவுவது அவர்களது உள்கட்சி பிரச்சினை. அதை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள்.
இவ்வாறு இல.கணேசன் தெரிவித்தார்.