சென்னை: விவசாயிகளை பாதிக்கும் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை கண்டிப்பாக அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் உறுதி அளித்ததாக தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்து திரும்பிய போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
விவசாயிகளை பாதிக்கும் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை தடுத்து நிறுத்துவது தொடர்பாக நெடுவாசல் போராட்டக் குழுவினர் 11 பேர் அதன் ஒருங்கிணைப்பாளர் வேலு தலைமையில் இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள்.
சந்திப்பு முடிந்து திரும்பிய பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
விவசாயிகளை பாதிக்கும் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை கண்டிப்பாக அனுமதிக்க மாட்டோம்: என்று முதல்வர் எங்களிடம் உறுதி அளித்தார். நானும் ஒரு விவசாயி தான்; அதனால் என்னால் உங்கள் பிரச்சினைகளை புரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசானது விவசாயிகளின் நலனை எப்பொழுதும் கருத்தில் கொண்டுதான் செயல்படும். அதே வழியில்தான் தாங்களும் செயல்படுவோம் என்று அவர் கூறினார்.
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டமானது தற்போது ஆராய்ச்சி நிலையில்தான் உள்ளது. இன்னும் துவங்கவில்லை. மேலும் இந்த திட்டத்திற்கான சுற்றுச் சூழல் அனுமதி மற்றும் பொது விற்பனை அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை. அவை இரண்டையும் கண்டிப்பாக வழங்கப் போவதில்லை என்று உறுதியளிக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக அரசு சார்பில் தெளிவான அறிக்கையொன்றை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எனவே முதல்வர் அளித்துள்ள உறுதியயையும் அவர் வெளியிடுவதாக கூறியுள்ள அறிக்கை பற்றியும், நெடுவாசலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராமக் குழுவினரிடம் எடுத்துரைப்போம்.
அதன் பிறகு ஒரு சுமுகமான முடிவு எடுக்கப்பட்டு அரசுக்கு தெரிவிக்கபப்டும். ஆனால் நாங்கள் மட்டுமே எந்த முடிவையும் எடுக்க முடியாது.
இவ்வாறு வேலு தெரிவித்தார்.