சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அறிக்கையை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே உள்ள மருத்துவர்களுடன் அவருக்கு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களும் சேர்ந்து சிகிச்சைஅளித்தனர். ஆனால் அந்த சிகிச்சைகள் எதுவும் பலன் அளிக்காமல் அவர் டிசம்பர் 5-ஆம் தேதி மரணம் அடைந்தார்.
அதன் பின்னர் அவர் மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் சந்தேகங்களும் எழுந்தன. சிலநாட்களுக்கு முன்னர் அப்பொல்லோ மருத்துவர்கள் மற்றும் லண்டனைச் சேர்ந்த மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
இருந்த போதிலும் தொடர்ச்சியாக சில கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூட அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து 27 சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது தொடர்பாக நேற்று கேள்விகள் எழுப்பினார்.
இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அறிக்கையை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையானது தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கையில் உள்ள விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை