மகாபாரதம் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்த வழக்கில், வள்ளியூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடிகர் கமல்ஹாசன் மனு செய்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நேர்காணல் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனிடம் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், பெண்ணை சூதாட்டத்துக்கான பந்தயப் பொருளாக வைத்து விளையாடி உள்ளதாக மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் நம் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பது ஒன்றும் ஆச்சர்யமானதாக இல்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்து மதத்தையும், இந்துக்கள் தெய்வ நூலாக போற்றிவரும் மகாபாரதம் குறித்தும் அவதூறான கருத்துக்களை தெரிவித்த நடிகர் கமல்ஹாசன் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தைச் சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர் வள்ளியூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நடிகர் கமல்ஹாசனை மே 5 ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரியும், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்துள்ளார்.
அதில், தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் நெறியாளர் கேட்ட கேள்விக்கு எனது மனதில் தோன்றிய கருத்துக்களைத் தெரிவித்தேன். ராமாயணம், மகாபாரதம் குறித்த பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு உள்ளன. கருத்துச் சுதந்திரம் நிறைந்துள்ள இந்தியாவில், கருத்துக்களைத் தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. நான் கூறிய கருத்துக்கள் எந்த மதத்தையும் புண்படுத்தும் நோக்கில் கூறப்பட்டவை அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.