சேகர் ரெட்டியிடம் லஞ்சம் பெற்ற 60 பேர் பட்டியல்: வருமான வரித்துறை தகவல்

தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் லஞ்சம் பெற்ற 60 பேர் பட்டியல் தமிழக அரசிடம் அளிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Published on
Updated on
1 min read

தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் லஞ்சம் பெற்ற 60 பேர் பட்டியல் தமிழக அரசிடம் அளிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னையை சேர்ந்த மணல் காண்டிராக்டரான சேகர் ரெட்டியின் வீட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில் ரூ.140 கோடி பணம் சிக்கியது. இதில் 2 ஆயிரம் ரூபாய் புதிய நோட்டுகளும் இருந்தன. இது தொடர்பாக சேகர் ரெட்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அமலாக்கப் பிரிவினர் சேகர் ரெட்டி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்த விசாரணையில் சேகர் ரெட்டி தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளிவந்தன. மணல் குவாரிகளை நடத்தி வந்த சேகர் ரெட்டி, அதில் முறைகேட்டில் ஈடுபட்டதும் அம்பலமானது. இதுதொடர்பாக அரசின் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளுக்கு சேகர் ரெட்டி லஞ்சம் கொடுத்திருப்பதாகவும் அப்போது தகவல் வெளியானது.
வருமான வரிச் சோதனையின்போது சேகர் ரெட்டியின் டைரியை அதிகாரிகள் கைப்பற்றி அதுகுறித்து விசாரித்ததாக கூறப்பட்டது. அந்த டைரியில் யார் யாருக்கு அவர் லஞ்சம் கொடுத்தார் என்ற விவரம் இடம் பெற்றுள்ளதாம். அமைச்சர்கள், அதிகாரிகள் என 60 பேர் பட்டியலை வருமானத் துறை அதிகாரிகள் தமிழக அரசிடம் ஒப்படைத்துள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சேகர் ரெட்டியின் 34 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முடக்கப்பட்டன. அமலாக்க துறை அதிகாரிகள் அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com