தென்தமிழகம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் 2 நாள்களுக்கு கன மழை பெய்யக்கூடும் எனறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கத்திரி வெயிலால் அதன் தாக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இடங்களில் வெப்பச்சலனத்தால் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
வியாழக்கிழமை காலை நிலவரப்படி, சிவகாசியில் 130, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 110, ஸ்ரீவில்லிபுத்தூரில் 90, சங்கரன்கோவிலில் 80, செங்கோட்டை, தென்காசியில் 70, ஈரோடு மாவட்டம் தாளவாடி, தேனி மாவட்டம் பெரியாரில் 60 மி.மீ. மழை பெய்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் சென்னைசெய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
வெப்பச்சலனம் காரணமாக 2 நாள்களுக்கு தென்தமிழகம், நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
குறைந்த வெப்பம்: பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளதால், தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. 5 இடங்களில் மட்டுமே 100 டிகிரிக்கும் அதிகமா வெப்பம் பதிவானது.
வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்)
கரூர் பரமத்தி 104
திருச்சி 103
திருத்தணி, மதுரை 102
பாளையங்கோட்டை 100
சென்னை 93